கூடங்குளம் அணுக் கழிவை கோலார் தங்கவயலில் கொட்டும் திட்டமே இல்லை: அணுசக்தி கழகம்
பெங்களூர்: கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலார் தங்கவயலில் கொட்டும் திட்டமே இல்லை என்று அணு சக்தி கழகம் அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு அங்கு வெளியாகும் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் கொட்டப் போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு கோலார் தங்கவயல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று கோலார் தங்கவயலில் பந்த் நடைபெற்று வருகிறது. இந்த பந்துக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அணுக் கழிவுகளை கொட்டுவதை எதிர்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
அணுக் கழிவுகளை இங்கு கொட்டினால் அதனால் மக்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றார்.
இந்நிலையில் கோலார் தங்கவயலில் உள்ள சுரங்கங்களில் கூடங்குளம் அணுக் கழிவுகளை கொட்டும் திட்டமே இல்லை என்று மத்திய அரசின் அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அணுசக்தி கழகத்தின் பொதுமக்கள் விழிப்புணர்வு பிரிவு தலைவர் ஸ்வப்னேஷ் மல்ஹோத்ரா கூறுகையில், கூடங்குளம் அணுக் கழிவுகளை கோலார் தங்க வயலிலோ, வேறு ஏதாவது ஒரு இடத்திலோ கொட்டும் திட்டம் எதுவும் இல்லை. கோலாரில் அணுக் கழிவுகளை கொட்டப் போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றார்.