மின் தடையை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
நெல்லை: பாவூர்சத்திரம் பகுதியில் மின் தடையை கண்டித்து கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 10 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் எப்பொழுது வரும், போகும் என்றே தெரியாமல் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவும் கடும் மின்வெட்டை கண்டித்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர், அடைக்கலப்பட்டணம், மகிழ்வண்ணநாதபுரம், ஆவுடையானூர், சிவநாடானூர், மடத்தூர் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் "மின்சாரத்திற்கு கண்ணீர் அஞ்சலி" என்ற தலைப்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை பொதுமக்கள் ரசித்து படித்து வருகின்றனர்.
அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது,
கண்ணீர் அஞ்சலி. அகால மரணமடைந்த மின்சாரம், தோற்றம் 6 மணிநேரம், மறைவு 18 மணிநேரம், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த மின்சாரம் மரணமடைந்ததால் வருந்துகிறோம். பச்சிளம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், பீடி சுற்றும் பெண்கள், விவசாயிகள் மற்றும் இதர தொழிலாளர்கள் அனைத்து பகுதி மக்கள் வருத்ததுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்வண்ணநாதபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.