தமிழக சட்டசபை வைரவிழா: எங்களுக்கு அழைப்பே இல்லையே- மாஜி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
சென்னை: நாளை பேரவை மண்டபத்தில் நடக்கும் தமிழக சட்டசபையின் வைர விழாவுக்கு தங்களை அழைக்காததால் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் வைர விழா நாளை பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆளுநர் ரோசைய்யா தலைமையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சட்டசபை தலைவர் தனபால், துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
ஆனால் இந்த விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படவில்லை. தங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாததால் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சட்டசபை வளாகம் சிறியது. அதன் கீழ் பகுதியில் தற்போதுள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் அமர முடியும். 1952ம் ஆண்டு சட்டசபை உறுப்பினர்களாக இருந்த பொள்ளாச்சி மகாலிங்கம், காலியண்ண கவுண்டர் உள்பட 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இடமில்லாததால் தான் அனைத்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்படவில்லை என்றார்.