பாலியல் பலாத்காரம்: நள்ளிரவில் மெரினா பீச்சில் நடிகை ரோகிணி போராட்டம்
கடந்த ஞாயிறு இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் தூத்துக்குடியில் பள்ளிமாணவி சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். நாடுமுழுவதும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நடிகை ரோகிணி தலைமையில் மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவ- மாணவிகள், கற்பழிப்பு சம்பவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களில் ஒரு பகுதியினர் சத்யம் தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி சிலையை வந்தடைந்தனர்.
மசோதாவை நிறைவேற்றுங்கள்
இந்த போராட்டம் குறித்து பேசிய நடிகை ரோகிணி, ''கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் நடத்தினோம் என்றார்.
பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மெரினா கடற்கரையில் நள்ளிரவு நடந்த இந்த போராட்டம் காரணமாக பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.