எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- இந்தியா துப்பாக்கிச் சூடு- ஒரு பாக். வீரர் பலி
ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடந்து கொண்டதால் இந்தியப் படையினர் பதிலடியாக துப்பாக்கி் சூட்டில் இறங்கினர். இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று அத்துமீறலில் ஈடுபட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவர்கள் நடந்து கொண்டதால் இந்தியப் படையினர் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சரமாரியாக பாகிஸ்தான் படையினர் மீது அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் குதித்னர். இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டார், இன்னொருவர் காயமடைந்தார்.
அதேசமயம், இந்தியத் தரப்பில் ஒரு வீட்டின் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது.
ஆனால் இந்தியப் படையினர்தான் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மீரின் சவன் பத்ரா சோதனைச் சாவடி பகுதியில் இந்தியப் படையினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதை பாகிஸ்தான் ராணுவம் முறியடித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உள்ளே அனுப்ப முயற்சித்ததாகவும், அதை இந்தியப் படையினர் முறியடித்து விட்டதாகவும் இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் பாண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறிய அளவிலான ஆயுதப் பிரயோகத்தையே இந்திய ராணுவம் மேற்கொண்டது. இது தீவிரவாதிகளை உள்ளே ஊடுறுவ வைக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார்.