பலாத்கார சம்பவம்: பஞ்சாப் விரைவு நீதிமன்றத்தில் 9 நாளில் தீர்ப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 9 நாளில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பலாத்கார குற்றங்களை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதி மன்றங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் விரைவு நீதிமன்றத்தில் பலாத்கார வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 9 நாளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹோசியார்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், லூதியானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஆண்டு பிரகாஷ் திவேதி என்பவனால் கடத்தப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி வெளியில் சொன்னால் அப்பெண்ணின் சகோதரரை கொலை செய்யப் போவதாகவும் அவன் மிரட்டியிருக்கிறான். பின்னர் அப்பெண்ணை டெல்லி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு பிரகாஷ் திவேதி தப்பி ஓடிவிட்டான்.
அந்தப் பெண்ணை டெல்லியைச் சேர்ந்த நர்விர் சிங் - ரோஷினி தம்பதியினர் மீட்டனர். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜனவரி 2-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 9 நாளில் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜே.எஸ்.பிந்தர் தீர்ப்பளித்தனர். மேலும் அவனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.