பெண்கள் பாதுகாப்புக்கு அவசர உதவி எண் 181: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு 181 என்ற அவசர உதவி இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
டெல்லியில் 23 வயது மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பெண்கள் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான அவசர உதவி இலவச தொலை பேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர கால தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத முடிவு செய்துள்ளதாகவும் கபில்சிபல் கூறினார்.
இதற்கு முன் அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணை பயன்படுத்தவும் மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்கும்.