தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்னை: 7 நாட்களில் விளக்கம் அளிக்க நிபந்தனை!
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, தேமுதிக எம்எல்ஏக்கள் 12 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்தப் பிரச்சனையை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
தங்களது தொகுதிப் பிரச்சனைகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அவருடைய அலுவலகத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள் வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ்குமார், தினகரன் ஆகியோர் மனு கொடுத்ததாகவும் அதை அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும் சட்டசபை தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் பேட்டியளித்தார்.
இதையடுத்து மனு கொடுத்த தேமுதிக எம்எல்ஏக்கள் மற்றும் அந்தக் கட்சியின் கொறடா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏவும் அரசு கொறடாவுமான வைகைச் செல்வன் மனு கொடுத்தார்.
மேலும், சட்டசபை வளாகத்தில் தன்னை அவதூறாகப் பேசிய தேமுதிக எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி மற்றும் தினகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி அதே கட்சியிலிருந்து வெளியேற இன்னொரு எம்எல்ஏவான மதுரை சுந்தரராஜன் சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.
இந்தப் பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாகக் கருதுவதால் அதை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி மீண்டும் மனு அளித்த செந்தில்குமார், அருட்செல்வன், முருகேசன், ஆர்.சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய குடியரசு கட்சியின் எம்எல்ஏ செ.கு.தமிழரசன் இன்னொரு கடிதத்தை சபாநாயகரிடம் தந்தார்.
இந்தப் பிரச்சனையையும் அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்தார் சபாநாயகர்.
இந் நிலையில் தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து விவாதிக்க உரிமைக் குழு திங்கள்கிழமை கூடியது. தலைமைச் செயலக சட்டசபை செயலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இந்தக் குழுவின் கூட்டம் அதன் தலைவரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட தேமுதிக எம்எல்ஏக்களிடம் எழுத்துப்பூர்வமாக 7 நாட்களுக்குள் விளக்கம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தகவல் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்தக் கடிதம் கிடைத்தவுடன் அவர்கள் தங்களது விளக்கங்களை அளிக்கலாம்.
இதன்படி சனிக்கிழமைக்குள் அவர்கள் தங்களது விளக்கங்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உரிமைக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை, வரவிருக்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில் சபாநாயகர் அறிவிப்பார் என்று தெரிகிறது.