நகை, புடவை பற்றி மட்டும் விசாரிக்காதீங்க, தொகுதி பற்றியும் விசாரியுங்கள்..பெண்களுக்கு அய்யர் அட்வைஸ்
சென்னை: பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நகை, புடவை பற்றி மட்டும் பேசக் கூடாது. மாறாக அவர்கள் சார்ந்த தொகுதி எப்படி உள்ளது, அதன் நிலவரம் என்ன என்பது குறித்தும் விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவின்போது அவர் பேசுகையில், ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி, 1ம் தேதியை அடிப்படை நாளாகக் கருதி, புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தும் பணிகள் நடக்கிறது. ஆனால், வாக்காளராக சேரவில்லை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை போன்ற குறைகளை, பொதுமக்கள் சொல்லிக் கொண்டே உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.
திருமண விழா, குடும்ப விழா, பொது விழாக்களில் பிறரை சந்திக்கும்போது, நகை, புடவை நன்றாக உள்ளது. எந்த கடையில் வாங்கினீர்கள்? என, பெண்கள் விசாரிக்கின்றனர்.இதோடு சேர்த்து, எந்த தொகுதியில் வாக்காளராக உள்ளீர்கள்? வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளீர்களா?' என விசாரிப்பதையும், வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் விழிப்பாகவும், நேர்மையாகவும் இருந்தால் தான், நேர்மையான பிரதிநிதிகளை தேர்வு செய்ய முடியும். கையூட்டு பெற்று ஓட்டளித்தால், நேர்மையற்ற பிரதிநிதிகளைத் தான் தேர்வு செய்யமுடியும். நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு, பிரதிநிதிகளை குறை சொல்வதில் பயனில்லை.
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல், சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுகளில், 11 சட்டசபை தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
பெண்கள் சரியான முடிவை, நேர்மையான முடிவுகளை எடுப்பவர்கள். எனவே, பெண் வாக்காளர்கள் அதிகரித்து உள்ளது, சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.