ரெபோ ரேட், சிஆர்ஆர் விகிதங்களை குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறையும்!

ரெபோ ரேட் குறைக்கப்பட்டுள்ளதால், குறைந்த வட்டியில் வங்கிகளுக்குப் பணம் கிடைக்கும். இதனால் வங்கிகளும் தங்களிடம் கடன் வாங்குவோருக்கான வட்டியைக் குறைக்க முடியும். இதன்மூலம் பொது மக்கள் வங்கிகளிடம் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
அதே போல சிஆர்ஆர் விகிதத்தையும் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. (CRR என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயம் இருப்பு வைக்க வேண்டிய தொகையாகும்). இதை 0.25 சதவீதம் குறைத்து 4 சதவீதம் என்ற அளவுக்கு ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.
இதன்மூலம் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்க வேண்டிய தொகையின் அளவு குறையும். இதனால் வங்கிகளிடம் அதிக நிதி கைவசம் இருக்கும். இதன்மூலம் பொது மக்களுக்கு வங்கிகளால் அதிக அளவில் கடன் வழங்க முடியும்.
ரெபோ ரேட், சிஆர்ஆர் குறைப்பு மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கார்ப்பரேட் லோன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும்.
சந்தையில் அதிக பணம் இருந்து அதற்கேற்க பொருள்கள் இல்லாவிட்டால், நாட்டில் பணவீக்கம் அதிகமாகும். கடந்த ஆண்டு பணவீக்கம் மிக அதிகமாக இருந்ததால் ரெபோ, சிஆர்ஆர் அளவுகளை ரிசர்வ் வங்கி அதிகரித்தது.
இதையடுத்து பணவீக்கம் குறைந்தபோதும் கூட இந்த விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கவே இல்லை. இதனால் வங்கிகளிலும் சந்தைகளிலும் பணப் புழக்கம் குறைந்தது. இதனால் இந்தியப் பொருளாதாரமும் தேக்கமடைந்தது.
இந் நிலையில் ரெபோ ரேட், சிஆர்ஆர் விகிதங்களை ரிசர்வ் வங்கி 9 மாதங்களுக்குப் பின் முதன்முதலாகக் குறைத்துள்ளது.
அதே நேரத்தில் இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாகவே இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதலில் இது 5.6 சதவீதமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
அதே போல அடுத்த நிதியாண்டிலும் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாகவே இருக்கும் என்றும் முன்பு கணக்கிட்டபடி 6.5 சதவீதமாக இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு 0.1 சதவீத வளர்ச்சியும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதும், பல்லாயிரம் கோடிகள் வருவாயை நாட்டுக்குக் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது கவலைக்குறியதாகும்.
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மத்திய நிதித்துறை தனது வருடாந்திர பொருளாதாரக் கொள்கையை அறிவிக்கவுள்ளது. இதற்கு முன்பே ரிசர்வ் வங்கி எச்சரிக்கை மணியை அடித்துள்ளதைப் பார்த்தால், பட்ஜெட்டும் மிக டைட்டாகவே இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications