3.75 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர் சார்பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முது நிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் காலியாக இருந்த 3,687 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி தேர்வு நடைபெற்றது.
தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடந்தது.
தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர்.
தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படும் என்று ஆவலோடு பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முடிவு வெளியாகவில்லை.
குரூப்-1 தேர்வுக்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருவதால் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.எனவே அடுத்த வாரம் குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications