'கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்!
திருப்பூர்: கடலை வியாபாரி ராமலிங்கத்தின் வீடு புகுந்து வருமான வரி அதிகாரிள் அமெரிக்க டிரஷரி பத்திரங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றபோது அவருக்கு 8வது வகுப்பு படித்தபோது சக மாணவி எழுதிய காதல் கடிதங்களையும் கூடவே தூக்கிக் கொண்டு போய் விட்டனராம். இந்த சுவாரஸ்ய தகவலை ராமலிங்கமே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டேயே பரபரப்புக்குள்ளாகிய ஒரு நபர் ராமலிங்கம். இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்தவர்.
வேர்க்கடலை வியாபாரியான ராமலிங்கம் வீட்டில் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பத்திரம் சிக்கியது.மேலும் சில கடிதங்கள், ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடிதங்கள் அனைத்தும் தனக்கு வந்த காதல் கடிதங்கள் என்று தற்போது கூறியுள்ளார் ராமலிங்கம்.
எதையுமே திருப்பித் தரலீங்க...
வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த எந்த ஆவணங்களையும் இதுவரை என்னிடம் திருப்பித் தரவில்லை. ஆவணங்கள் அனைத்தும் ஆய்வில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை போலி என்று அறிவித்துள்ளனர்.
காதல் கடிதத்தையும் தூக்கிட்டுப் போய்ட்டாங்களே...
எனக்கு வந்த காதல் கடிதங்களை எந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள். காதல் கடிதத்துக்கும், எனது வருமானத்துக்கும் என்ன சம்பந்தம்? கடிதங்களை திருப்பி தந்து விடலாமே என்று கேட்டபோது அப்படியா? அது காதல் கடிதமா? என்று என்னிடமே கேட்கிறார்கள்.
நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு...
இதைக் கேட்டதும் எனக்கு நெஞ்சமே வெடித்து விடுவது போல் இருந்தது. அதிகாரிகள் குழம்புவதைப் பார்த்தால் ஆவணங்கள் எதையும் அவர்கள் சரிபார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.
பழி வாங்குகிறார்களோ...
என்னிடம் எடுத்துச் சென்ற காதல் கடிதத்தை கேட்டால் எந்த பைலில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். என்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான அமெரிக்க பத்திரத்தையும், காதல் கடிதங்களையும் திருப்பித் தர வேண்டும். அதிகாரிகள் தாமதப்படுத்துவது வேண்டும் என்றே என்னை பழி வாங்குவது போல் உள்ளது.
எட்டாப்பு மாணவி எழுதிய காதல் கடிதம்
அந்த காதல் கடிதம் நான் கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரில் 8-ம் வகுப்பு படித்தபோது என்னுடன் படித்த மாணவி எனக்கு எழுதிய காதல் கடிதம் ஆகும். அதை நான் பொக்கிஷமாக வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் ராமலிங்கம்.
வருமான வரித்துறையினரே ராமலிங்கத்தின் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க...