தென் மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க பம்பா- அச்சன் கோவில்- வைப்பாறு நதிகள் இணையுமா?
பொய்த்துப்போன பருவமழையால் நாடுமுழுவதும் நீராதாரங்கள் குறைந்து வருகின்றன. தென்மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க நீண்ட நாள் கோரிக்கையான பம்பா - அச்சன் கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்புத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நம்பியிருப்பது, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழைகளைத்தான். கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழைகள் அவ்வப்போது பெய்வதும் பின்னர் ஏமாற்றுவதுமாக இருக்கின்றன.
பருவமழை பொய்த்து போனதால் ஆறு, குளங்கள் வற்றிப் போவதோடு விவசாயமும் சூதாட்டமாகிவிட்டது. இதனால் தென்மாவட்டங்களில் பல விவசாயக்குடும்பங்கள் விவசாய தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு மாறிவருகின்றனர்.
நிலத்தின் மீது நம்பிக்கை வைத்து விவசாயம் செய்தவர்கள் நலிவடைந்து கடன் பிடியில் சிக்கி தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏமாற்றிய பருவமழை
காவிரி டெல்டா மாவட்ட மக்களை காவிரி நீர் ஏமாற்றியது போல நெல்லை விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களை பருவமழை ஏமாற்றிவிட்டது.
பருவமழையை நம்பி கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடனில் தத்தளிக்கும் விவசாயிகள்
பெரும்பாலும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் இப்பகுதி மக்கள் பருவமழை பொய்ததால் பெரும் நஷ்டம் அடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் உள்பட நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களின் விவசாய மேம்பாட்டிற்காக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
வீணாக கலக்கும் நீர்
அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டம் நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு வரும் திட்டமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலக்கும் அச்சன்கோவில் மற்றும் பம்பா நதிகளின் உபரி நீரில் 20 சதவீதத்தை மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு அடிவாரத்தில் செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரைக்கு கொண்டு வந்து வைப்பாறுக்கு திருப்புவதுதான் இத்திட்டமாகும். இவ்வாறு நதிகளை திருப்பும்பட்சத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறும்.
குடிநீர் மின் உற்பத்தி
இத்திட்டத்தின் மூலம் இப்பகுதிகளை சேர்ந்த குடிநீர் தட்டுபாடு நிலவும் ஆயிரக்கணக்கான கிராமங்களும் பாசன வசதி பெரும். அத்துடன் ஆண்டிற்கு 1114 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு மையம் (என் டபியுள்யூ டிஏ) மூலம் தயாரிக்கப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கேரளா எதிர்ப்பது ஏன்
இந்தியாவில் திட்ட வரைவு செய்யப்பட்ட 8 நதி நீர் இணைப்பு திட்டங்களில் அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேக்கரையில் கடந்த 2001ம் ஆண்டு அடவி நயினார் அணை கட்டப்பட்ட போது அச்சன்கோவில்-பம்பா-வைப்பாறு திட்டத்தை தான் தமிழக அரசு துவங்கி உள்ளது என கேரள அரசு குற்றம் சாட்டியது. பின்னர் கேரள நீர்வளத்துறை அமைச்சர்,எதிர்கட்சி தலைவராக இருந்த அச்சுதானந்தன் போன்றவர்கள் பணியை பார்வையிட்ட பின்னர்தான் சமாதானமானார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியை சந்தித்து வரும் நெல்லை மாவட்ட விவசாயிகளிடையே தற்போது இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்திட்டத்திற்கு கேரளா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கேரள எம்பிகளும் இத்திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கேரளா மற்றும் மத்திய அரசிடம் பேசி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு கிடைக்க செய்ய தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்
இத்திட்டத்தை ஏற்று கொள்ள மத்திய அரசு மூலம் கேரள அரசை நிர்பந்திப்பதோடு விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் நீர்வள கழகம் மற்றும் திட்ட கமிஷன் ஓப்புதலோடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முனைய வேண்டும் என தென்மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.
பாலைவனமாக மாறும் அபாயம்
அச்சன்கோவில் மற்றும் பம்பாவில் அதிகப்படியாக கடலில் கலக்கும் நீரில் 22 ஆயிரம் மில்லியன் கன அடி உபரி நீரை மட்டுமே மேக்கரை வழியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு மெத்தன போக்கு கடைபிடித்தால் நெல்லை மாவட்டம் உள்பட தென்மாவட்டங்கள் பாலைவனமாக மாறி வருவதை யாராலும் தடுக்க முடியாது என விவசாயிகள் குமுறுகின்றனர்.
பாராளுமன்றத்தில் வைகோ
தென்மாவட்ட மக்களுக்கு நன்மைத் தரக்கூடிய இந்த திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளுக்கு முன்போ பாராளுமன்றத்தில் வைகோ குரல் எழுப்பியுள்ளார்.
"மேற்கு நோக்கி பாயும் ஆறுகளின் நீரைத் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் பயன்படுத்தலாம். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலமும் வளம்பெறும். நீருக்குப் பதிலாக அவர்கள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் அரிசியும் கொடுக்க முடியும். நீதிபதி கிருக்ஷ்ண அய்யர் கேரள அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தை வலியுறுத்தினார். பிரிட்டிஷார் காலத்திலேயே இத்திட்டம் பற்றிப் பேசப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கே தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்று குரல் கொடுத்துள்ளார் வைகோ. தமிழகத்தை ஆளும் அரசுகள் இதை கவனத்தில் கொள்ளுமா என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.