இன்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனை நடத்திய வட கொரியா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் பொருளாதார கட்டுப்பாடுகளையும் மீறி இந்தச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு மையங்கள் பதிவு செய்தன. ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரியவந்தது.
இந்தச் சோதனை நடத்தப்பட்டதை வட கொரியாவும் உறுதி செய்துள்ளது.
நிலத்துக்கு அடியில் 1 கி.மீ. ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, ராக்கெட் சோதனை, அணு குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது.
சீனாவும் இந்த நாட்டுக்கு மறைமுக உதவிகளையும் ஆதரவையும் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை மனதில் வைத்தே அணு குண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறோம் என்று வட கொரியா வெளிப்படையாகவே அறிவித்துள்ளதும் நினைவுகூறத்தக்கது.