ஆசிட் வீச சுரேஷுக்கு உதவிய வினோதினியின் பக்கத்து வீட்டு பெண்?
சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த என்ஜினியர் வினோதினி தன் சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றபோது அவர் மீது அவரை ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் 14ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஆசிட் வீசினார். தீபாவளிக்கு ஊருக்கு சென்ற வினோதினி சென்னைக்கு திரும்ப பேருந்து நிலையத்திற்கு வந்தபோது தான் இந்த கொடூரம் நடந்தது.
அவர் அந்நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் தகவலை யாரோ சுரேஷுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு தகவல் தெரிவித்தவர் பற்றிய விவரங்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. மேலும் ஆசிட் வீச சுரேஷுக்கு 3 பேர் உதவியதாக வினோதினியின் குடும்பத்தார் கொடுத்த புகார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வினோதினியின் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் சுரேஷுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் வினோதினி பற்றி சுரேஷுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்து வந்தாராம். அதனால் அவர் தான் சுரேஷுக்கு தகவல் கொடுத்ததாக வினோதினி வீட்டார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை போலீசார் விசாரிக்கவில்லை.
இது குறித்து வினோதினியின் மாமா ரமேஷ் கூறுகையில்,
வினோதினி மீது ஆசிட் வீசியதில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு தொடர்புள்ளது என்று நாங்கள் போலீசாரிடம் தெரிவித்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் ஆசிட் விற்ற கடைக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் யார் என்று கூட வழக்கில் தெரிவிக்கவில்லை.
துவக்கம் முதலே போலீசார் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. சுரேஷுக்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும். ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு எனக்கு ஒருவன் போன் செய்து உங்களை தொலைத்துவிடுவோம் என்று மிரட்டினான். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் பயனில்லை என்றார்.
இன்று உடல் தகனம்:
வினோதினியின் உடல் இன்று புதுவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இடத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவது உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அதன் பிறகு புதுவைக்கு கொண்டு செல்லப்படும் உடல் அங்குள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் வினோதினியின் உடல் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு இன்று இரவு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவரது தந்தைக்கு சொந்தமான வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது உடல் இன்று அரவு அல்லது நாளை தகனம் செய்யப்படும்.