மதகுபட்டியில் ஒரு பஞ்சாயத்து.. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் 'கேஸ்' போட்ட பெண் எஸ்.ஐ.!
சிவகங்கை: பஸ்சி்ல் பயணித்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டர் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய டிரைவர் மீதும் வழக்குப் போட்டார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சத்யா. இவர் தனது தோழியுடன், சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார். அவர் மதகுப்பட்டிக்குப் போக வேண்டும், தோழி திருப்பத்தூர் போக வேண்டும்.
எஸ்.ஐ. சத்யாவிடம் வந்த கண்டக்டர் டிக்கெட் எடுக்கச் சொன்னார். அதற்கு சத்யா, நான் எஸ்.ஐ. டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்றார். அதற்கு கண்டக்டர் வாரண்ட் இருந்தால்தான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் எடுக்க வேண்டும் என்றார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து எஸ்.ஐயை அமைதிப்படுத்திய அவரது தோழி, இருவருக்கும் சேர்த்து அவரே டிக்கெட் எடுத்தார். அப்போது 3 ரூபாய் சில்லரை தருமாறு கண்டக்டர் கேட்கவே டென்ஷனாகி விட்டார் சத்யா.மறுபடியும் பஞ்சாயத்தானது.
அப்போது டிரைவரும் கண்டக்டருக்கு ஆதரவாக பஸ்சை நிறுத்தி விட்டு குரல் கொடுத்தார். இதையடுத்து பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விட உத்தரவிட்டார் சத்யா. பிரச்சினை பெரிதானதால் டிரைவரும், மதகுப்பட்டி காவல் நிலையத்திற்கு பஸ்சைக் கொண்டு சென்றார்.
அங்கு, டிரைவர் பேட்ஜ் அணியவில்லை என்று கூறி டிரைவர் மீதும், அதிக அளவில் பயணிகளை ஏற்றியதாக கண்டக்டர் மீதும் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் போட்டனர் போலீஸார். இதனால் டிரைவரும், கண்டக்டரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.