கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கசிவு ஏற்பட்டதாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் திடீரென வதந்தி பரவியது. வதந்தியை உண்மை என நம்பிய பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி நடுரோட்டில் தஞ்சமடைந்தனர்.
சிறிது நேரத்தில் யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி என்ற உண்மை தெரிய வந்ததையடுத்து சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள லீபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்றதாகவும், ஆனால், அவர்கள் யாரும் வீடு திரும்பவில்லை என்ற வதந்தி வேகமாக பரவியது.
இதனையடுத்து உளவுத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் யாரும் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கூடன்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் செல்போனில் இருந்து இதுபோன்ற விஷமப் பிரசாரம் செய்யப்படுவதும், அதற்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் துணைபோவதும் தெரியவந்தது.இதனையடுத்து கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.