விலையுயர்வின் தாக்கம்: கல்லூரி கட்டணமும் 20 சதவீதம் உயர்கிறது
சென்னை: விலைவாசி உயர்வை தொடர்ந்து கல்வி கட்டணத்தையும், விடுதி மற்றும் உணவு கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்த தனியார் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வின் காரணமாக கடந்த சில மாதங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. கடந்த சில மாதங்களாக காய்கறி விலையும் படிப்படியாக அதிகரித்தபடி உள்ளது. பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தினால் வரும் மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்வு:
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக கல்லூரி கட்டணமும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தங்களது கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து உள்ளன.
தனியார் கல்லூரிகள்:
தற்போது தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கல்வி கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.80 ஆயிரமும், விடுதி மற்றும் உணவு கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை தொடர்ந்து கல்வி கட்டணத்தையும், விடுதி மற்றும் உணவு கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்த தனியார் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.
வேறு வழி இல்லை:
இது குறித்து தனியார் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. எனவே எங்களுக்கு கல்வி கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியே இல்லை' என்றார்.
மாணவர்கள் அதிர்ச்சி:
தனியார் கல்லூரிகளின் இந்த முடிவு மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.