தனி ஈழம்: தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு!
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை ‘நட்பு நாடு' என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் தீர்மானங்களை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த பேட்டியின்போது அவர் கூறிய பதில்கள்:
கேள்வி: தமிழக சட்டசபை தீர்மானத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழகத்தில், மற்ற கட்சிகள் மட்டுமின்றி எங்கள் கட்சியினரிடமும் கடுமையான உணர்வுகள் நிலவுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உணர்வுகள், உலகில் பலரும் கொண்டுள்ள உணர்வுகளுடன் உடன்பட்டுள்ளன. அதே சமயத்தில், இலங்கையுடன் நாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
கேள்வி: இலங்கையை நட்பு நாடு அல்ல என்று அறிவிப்பீர்களா?
பதில்: இல்லை.
கேள்வி: பொருளாதார தடை விதிக்க பரிசீலிப்பீர்களா?
பதில்: இல்லை.
கேள்வி: தமிழ் ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவீர்களா?
பதில்: இல்லை.
கேள்வி: அப்படியானால், சட்டசபை தீர்மானத்தின் 3 அம்சங்களையும் நிராகரிக்கிறீர்களா?
பதில்: இந்த கோரிக்கைகளை ஏற்கும் பேச்சுக்கே இடம் இல்லை. இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது அல்ல. மற்ற மாநில சட்டசபைகளும் உள்ளன. அவையெல்லாம் இதை ஆதரிக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரித்தால், அது வேறு விஷயம்.
ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆதரித்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அந்த மாநிலம் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை," என்றார்.