திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேரோட்டம்… பல்லாயிரக்கணக்கனோர் தரிசனம்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரவிழா 26-ந்தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 27-ந்தேதி சூரசம்ஹாரமும், 28-ந்தேதி பட்டாபிஷேகமும் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை முருகன்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண மதுரையில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சமேதராக கலந்து கொண்டார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கோவில் வாசல் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வைரத்தேருக்கு சுவாமி எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர்.
கிரிவலப்பாதையில் வலம் வந்த தேர் பகல் 11 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வந்திருந்தனர். இதனையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.