தானேவில் சட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 41 பேர் பலி, 65 பேர் காயம்
மகராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள ஷில் பாட்டா பகுதியில் உரிய அனுமதி பெறாமல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. தற்போது வரை 7 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல மாடிகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியேறிவிட்டனர். குடும்பங்கள் தவிர தரை தளத்தில் சிறிய கடைகள், 2வது மாடியில் தனியார் டியூஷன் வகுப்பு வேறு நடந்து வந்தது. டியூஷன் வகுப்பு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. மாணவர்கள் சென்ற அரை மணிநேரத்தில் அதாவது மாலை 6.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 41 பேர் பலியாகினர், 65 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தேசிய இடர் கால மீட்பு படை மற்றும் மும்பையில் இருந்து 100 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டிடத்தை கட்டும் லக்கி டெவலப்பர்ஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரக்குறைவான பொருட்களை வைத்து கட்டிடம் கட்டியதும் இதற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.30 மணிக்கு துவங்கிய மீட்பு பணி இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இடிபாடுகளில் இருந்து 5 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. கட்டிடம் இடிந்து 12 மணிநேரம் கழித்து மீட்கப்பட்ட இந்த குழந்தைகள் இடர்பாடுகளுக்கு இடையே இத்தனை மணிநேரம் இருந்தும் உயிருடன் இருப்பது பெரிய அதிசயமாக கருதப்படுகிறது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேஷ் நாயக் கூறுகையில், அந்த கட்டிடத்திற்கு ஆக்குபேஷன் சான்றிதழ் இல்லை. அதற்கு ஆர்கிடெக்ட் இல்லை. ஒன்றரை மாதத்தில் இத்தனை மாடிகள் கட்டப்பட்டுள்ளது. ஆகையால் கட்டிடம் வலுவானதாக இல்லை. இதற்கு யார் காரணம் என்று கூறுவது கடினம். ஆனால் நாம் அனைவரும் தான் காரணம் என்றார்.