காங். சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு இல்லை. வெற்றிக்கு பிறகே தேர்வு செய்வோம்- திக் விஜய் சிங்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், பிரதான எதிர்க்கட்சி சார்பில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் பெயரும் இந்த பதவிக்கு அடிபட்டு வருகிறது.
ராகுலா... இல்ல மன்மோகன் தானா...
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பிரதமர் வேட்பாளர் பதவி குறித்து இதுவரை தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ராகுல் காந்தி மற்றும் கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்து வரும் மன்மோகன்சிங் ஆகியோருடைய பெயர் இந்த பதவிக்கு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தது.
திடீர் திருப்பம்:
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான திக்விஜய்சிங், அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். வழக்கமாக, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவர், நேற்றைய போட்டியின்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
சோனியா தலைமை:
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிலைப்படுத்த மாட்டோம் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் தலைமையில் சந்திப்போம். பிரதமர் வேட்பாளர் பதவிக்கு யாரையும் முன்னிலைப்படுத்த மாட்டோம்'' என்று, அவர் கூறினார்.
ஜனாதிபதி தலைமை:
‘‘நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் தேர்தலை சந்தித்து வருகிறோம். நமது ஆட்சி முறை அமைப்பு, ஜனாதிபதியை தலைமையாகக் கொண்டது அல்ல. எனவே முன்கூட்டியே ஆட்சித்தலைவருக்கான பெயரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மன்மோகன்சிங் அவருடைய கடமையை போற்றத்தகுந்த வகையில் செய்து இருக்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு முடிவு:
தேர்தலில் நாங்கள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், பிரதமர் யார் என்பதை அப்போது முடிவு செய்வோம். எனவே இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்று நாங்கள் முன்னிலைப்படுத்த மாட்டோம்.
ராகுல் கருத்து சரியே:
‘யார் பிரதமர் ஆவது என்பது முக்கியம் அல்ல. எந்த கட்சி ஆட்சிக்கு வருவது என்பதுதான் முக்கியம்' என்று, இந்த பிரச்சினை குறித்து ராகுல் காந்தி ஏற்கனவே சரியான கருத்தை கூறி இருக்கிறார்''. இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
நரேந்திர மோடி பற்றி...
‘‘அது குறித்து ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நரேந்திரமோடி, குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி, அவ்வளவுதான். அந்த மாநிலத்தை விட்டு வெளியே அவர் எந்த சாதனையும் செய்யவில்லை. அவரை யாருடனாவது ஒப்பிட வேண்டும் என்றால், மற்ற மாநில முதல்-மந்திரிகளுடன்தான் ஒப்பிட முடியும். எந்த ஒரு துறையிலுமே குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இல்லை.
குஜராத்...
மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், குஜராத்தை விட அசாம் மாநிலம் முன்னணியில் உள்ளது. கேரள மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானத்தை எடுத்துக்கொண்டால், குஜராத்தை விட டெல்லியும் அரியானாவும் முன்னிலையில் உள்ளன.
பொருட்கள் உற்பத்தி மற்றும் அன்னிய முதலீட்டில் குஜராத்தை விட மராட்டியம் சிறப்பிடம் பெற்றுள்ளது. எனவே நரேந்திரமோடி மற்றவர்களை விட தனிச்சிறப்பு வாய்ந்தவர் என்று எப்படி கூற முடியும்? மோடி பற்றி ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்படும் தகவல்கள் தேவையற்றவை. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான சட்ட மசோதாக்களை கொண்டு வந்தது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராட மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.'' இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.