புல்லர் மனு தள்ளுபடி: ஜனாதிபதியிடம் மீண்டும் முறையிடுவோம்: அகாலி தள்
சண்டிகர்: கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால் மட்டுமே புல்லரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் பஞ்சாபின் ஆளும் அகாலிதள் கட்சி மற்றும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி ஆகியவை அதிர்ச்சியடையந்துள்ளன.
1993ஆம் ஆண்டு டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புல்லர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். அவரது மனு தள்ளுபடியானது. குடியரசுத் தலைவருக்கும் கருணை மனு அனுப்பினார். ஆனால் 2003ஆம் ஆண்டு அவர் அனுப்பிய கருணை மனுவை 2011ஆம் ஆண்டு 8 ஆண்டு கால தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்தார். தமது மனுவவை 8 ஆண்டுகால தாமதமாக நிராகரித்ததால் தமது தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் புல்லர் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குடியரசுத் தலைவர் காலதாமதமாக நிராகரித்தார் என்பதாலேயே தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியாது என்று கூறி புல்லரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த அகாலி தளத் தலைவர் பிரேம்சிங் சந்த்முஜ்ரா, இது எதிர்பாராத ஒரு தீர்ப்பு. பஞ்சாப் மாநிலத்தின் அப்போதைய சூழ்நிலையை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். புல்லரை தூக்கிலிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம். இதில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
புல்லரின் மனு தள்ளுபடி தொடர்பாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் சிங் பஜ்வா, நாட்டின் மிக உயரிய நீதிமன்ற அமைப்பு அளித்திருக்கும் தீர்ப்பு இது. நாம் மதிப்பளிக்க வேண்டும். இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்றார் அவர்.