சிபிஐ அறிக்கையில் 'இலக்கண பிழைகளையே' சட்ட அமைச்சகம் திருத்தியதாம்: ஞானதேசிகன் சொல்கிறார்!
இது தொடர்பாக ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டுமென்றும், சட்ட அமைச்சர் அஸ்வின்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தை 4வது நாளாக முடக்கி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மத்திய புலனாய்வுத்துறையின் அறிக்கையை சட்ட அமைச்சகம் பார்த்ததாக அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
அதெல்லாம் சட்ட அமைசக்கம் பார்க்கலாம்
அரசின் சார்பில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிற அறிக்கை, பதில் மனு போன்றவைகள் சட்டத்துறையின் பார்வைக்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்படுகிறது என்பது நடைமுறை விதியாகும். அது மாவட்ட நீதிமன்றமாக இருந்தாலும், உயர்நீதிமன்றமாக இருந்தாலும், உச்சநீதிமன்றமாக இருந்தாலும் வெட்டிங் என்கிற இந்த முறை கையாளப்படுகிறது என்பதை மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சராக இருந்தவருமான அருண் ஜெட்லிக்கும் இது தெரியாததல்ல.
இலக்கணப் பிழைதான் திருத்தம்
ஒரு முக்கியமான வழக்கில் தாக்கல் செய்யப்படுகிற பதில் மனு அல்லது அறிக்கை சட்ட அமைச்சகத்தின் மூலமாக இதுபோல பார்வையிட்டு அனுப்பப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஒருவேளை சரியான முறையில் அந்த மனு தயாரிக்கப்படாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு மத்திய புலனாய்வுத் துறைக்கும், சட்ட அமைச்சகத்திற்கும் உண்டு. இதில் கூட சில இலக்கண பிழைகளை திருத்தியதாகத்தான் சட்ட அமைச்சகம் சொல்லியிருக்கிறது. ஒருவேளை அமைச்சர் தலையீடு இருந்து, அது திருத்தப்பட்டிருந்தால் அதை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் போது உச்சநீதிமன்றம் அதனை கண்காணித்துக் கொள்ளும்.
முடங்கிய நாடாளுமன்றம்
வெவ்வேறு காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை சில அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு காரணத்திற்காகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து இடதுசாரி நண்பர்களும், டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார செயலுக்கு முலாம் சிங் யாதவ் கட்சியினரும், 2ஜி விவகாரத்தில் தி.மு.கவும், அ.தி.மு.க.வும் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இழந்தால்தான் பதவி விலக வேண்டும். மக்கள் மன்றத்தில் நம்பிக்கை இழக்கும் போதுதான் அவ்வரசு மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கப்படும். ஆளுகிற பெரும்பான்மை கட்சியின் நம்பிக்கை இழந்தால்தான் பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதான் இ;ந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. நாடாளுமன்றத்தில் இந்த நம்பிக்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு இழந்து விட்டது என்பதை நிரூபிக்க ஏன் இந்த கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய தயங்குகின்றன ?
நிலக்கரி ஊழல் என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவதில் என்ன பயன் ? மத்திய கணக்காயர் அறிக்கையில் பிரதமரைப் பற்றியோ, வேறு எந்த அமைச்சரைப் பற்றியோ ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை எதிர்கட்சியினர் சொல்ல வேண்டும். அரை மணி நேர விவாதம், குறுகிய கால விவாதம், கவன ஈர்ப்பு கோரிக்கை, ஒத்தி வைப்பு தீர்மானம் என்று நாடாளுமன்றத்தில் எந்த பொருள் பற்றியும் விவாதிக்க வழிமுறைகள் இருக்கும் போது இந்த விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமரும், மற்ற அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொல்லிய பிறகும் தலைப்புச் செய்திக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?
விவாதத்துக்கு பயம்
விவாதம் நடந்தால் தங்கள் சாயம் வெளுத்துவிடும் என்பதால் ஊழல், ஊழல் என்று கூச்சல் போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஊழல் நடந்திருக்குமோ என்ற சந்தேக விதையை விதைப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. வருகிற தேர்தலின்போது இந்த கட்சிகள் மக்கள் மன்றத்தின் நம்பிக்கையை இழப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.