மாணவர் காங். தலைவர் தேர்தலில் வென்ற ஜி.கே.வாசன் ஆதரவாளர்: முடிவு அறிவிப்பது நிறுத்திவைப்பு!
சமீபத்தில் தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. முல்லா கான் என்பவர் தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தேர்தலில் 17 மாவட்டங்களை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். 12 மாவட்டங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்-
அவரது மகன் கார்த்தி ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
மாநில தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கலையரசனும், ப.சிதம்பரம் ஆதரவாளரான ராமநாதனும் போட்டியிட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் ஜி.கே.வாசன் ஆதரவாளரான கலையரசன் சுமார் 800 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.
இந் நிலையில் கலையரசனின் கல்வி சான்றிதழ் போலியானது என்று திடீரென புகார் கூறப்பட்டது. இதனால் தேர்தல் முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக இது தொடர்பாக தேர்தல் அதிகாரி முல்லா கான் விசாரணை நடத்தினார். இன்று அவர் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பிரதிநிதி ஒருவரை கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அனுப்பி வைக்கவுள்ளார்.
இவர் கலையரசனின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னரே முடிவு அறிவிக்கப்படுமாம்.
ஏற்கனவே ராகுல் காந்தி- ஜி.கே.வாசன் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர் அதிக வாக்குகள் பெற்றும் கூட மாநிலத் தலைவராவதில் சிக்கல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மாவட்டத் தலைவர்களாக வெற்றி பெற்ற தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.