கருணாநிதி பேரன் போல் பேசி மோசடி செய்தவன் சென்னை தொழிலதிபரிடம் ஐஏஎஸ் அதிகாரி என்று ரூ.13 கோடி மோசடி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் போல பேசி மோசடி செய்த நபர் சென்னை தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.13 கோடி மோசடி செய்துள்ளான்.
பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் (23) கருணாநிதியின் பேரன் போன்று போனில் பேசி மோசடி செய்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தான். இந்த வழக்கில் அவனது வங்கிக் கணக்கை சென்னை போலீசார் முடக்கினர். அதில் ரூ. 6.7 கோடி இருந்தது.
அவன் மீது மதுரை, கோவை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உள்பட தமிழகம் முழுவதும் 6 வழக்குகள் உள்ளன. மேலும் கர்நாடகாவில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சுகாஷ் அண்மையில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம், அவரது மனைவி சித்ராவை ஏமாற்றியுள்ளான்.
நாணயம் போட்டால் பொருட்கள் தரும் வெண்டிங் மிஷின் தயாரிக்கும் Future Techniks Private Limited என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாலசுப்பிரமணியம் இந்த மெஷின்கள் குறித்து பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அதை பார்த்த சுகாஷ், பாலசுப்பிரமணியத்தை போனில் தொடர்பு கொண்டு தனது பெயர் ஜெபக்குமார் என்றும், மத்திய அரசின் பெங்களூர் திட்ட ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறினான்.
ரூ.132 கோடிக்கு ஆணுறை மெஷின் திட்டம் ஒன்றை செயல்படுத்த உங்கள் கம்பெனி மெஷினை வாங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளான். இந்த ஆர்டர் உங்களுக்கு கிடைக்க முதல்கட்டமாக ரூ.42,000 அனுப்பி வைக்குமாறு கூறவே, பாலசுப்பிரமணியம் சுகாஷின் வங்கிக் கணக்கில் கேட்ட பணத்தைப் போட்டார்.
இதையடுத்து சுகாஷ் இத்திட்டம் தொடர்பாக போலி ஆவணம் தயாரித்து பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினான். ரூ.132 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.19.23 கோடி பணமாவது நீங்கள் முதலில் கட்டினால் தான் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளான்.
இதையடுத்து பாலசுப்பிரமணியம் கனரா வங்கியில் ரூ.19.23 கோடி பணத்தை கடன் வாங்கினார். அதை சுகாஷ் கூறியதன் பேரில் மும்பையில் இரு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
வங்கி அதிகாரிக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 கோடி தான் கடன் தர அதிகாரம் உள்ளது. ஆனால், கனரா வங்கியின் தலைமை மேலாளர் ஜெகதீசா தனது அதிகார எல்லையைத் தாண்டி ரூ. 19.23 கோடியை பாலசுப்பிரமணியத்துக்கு தந்துள்ளார். அதை மும்பையில் உள்ள 2 வங்கி கணக்கிற்கும் மாற்றினார் பாலசுப்பிரமணியன்.
இதையடுத்து அந்தக் கணக்கில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை எடுத்துள்ளான் சுகாஷ். மேலும் ஆன்லைன் மூலம் வேறு கணக்கிற்கும் பணத்தை மாற்றிவிட்டான்.
இந்த வங்கிக் கணக்கின் செயல்பாடுகள் குறித்தும், சென்னையிலிருந்து ஒரே நேரத்தில் ரூ. 19.23 கோடி பணம் இரு வங்கிக் கணக்குகளுக்கு இடம் மாறியது குறித்தும் சந்தேகமடைந்த வங்கியின் மற்றொரு உயர் அதிகாரியான நல்ல சிவம் இது குறித்து தனது அதிகாரிகளுக்குத் தகவல் தந்துவிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வங்கி கணக்கில் இருந்த ரூ.3.3 கோடியை மட்டும் முடக்கினர். மீதமுள்ள ரூ.13 கோடியை சுகாஷ் எடுத்துவிட்டான்.
இந்த வழக்கில் விதிகளை மீறி பெருமளவு பணத்தை ஆன்லைனில் வங்கிக் கணக்குக்கு மாற்றிய பாலசுப்பிரமணியம், அவரது மனைவி மற்றும் வங்கி அதிகாரி ஜெகதீசா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுகாஷ் தன்னை யாரும் கைது செய்யக் கூடாது என்று மும்பை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கிவிட்டு பின்னர் சென்னை வந்து உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தான். அவனுக்கு முன் ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவனது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாஷ் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளான். சுகாஷின் பின்னணியில் பெரும் மோசடி கும்பல் இருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.