லண்டனில் ராணுவ வீரர் தலை துண்டிப்பு: 2 கொலையாளிகளை சுட்ட போலீசார்
லண்டன்: லண்டனில் ஒரு ராணுவ வீரரை 2 பேர் சேர்ந்து தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்த 2 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
தென்கிழக்கு லண்டனில் உள்ள ஊல்விச்சில் இருக்கும் பள்ளி ஒன்றின் அருகே 2 பேர் சேர்ந்து ஒரு இங்கிலாந்து ராணுவ வீரரின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்த இடத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் சிதறிக் கிடந்ததுடன் ராணுவ வீரர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது அந்த வழியாகச் சென்றவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த இருவரும் ராணுவ வீரரை கொல்லும்போது அல்லாஹு அக்பர் என்று கூறியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 பேரையும் சுட்டனர். இதில் காயமடைந்த அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குண்டடி காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கூறிய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அரசு அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார். இந்த சம்பவம் தீவிரவாதிகள் வேலை என்று தான் தெரிகிறது என கேமரூன் தெரிவித்தார்.
முன்னதாக கொலையாளிகள் தங்களை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்குமாறு சம்பவத்தை பார்த்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். அப்படி செல்போனில் பதிவான வீடியோவில் கொலையாளிகளில் ஒருவர் கூறியிருப்பதாவது,
பழிக்குப் பழி. பெண்கள் இந்த கொடூரச் செயலை பார்க்க வேண்டியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர். நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. உங்களை பற்றி கவலைப்படாத அரசை தூக்கி எறியுங்கள். அல்லாஹ் மீது ஆணையாக நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்றார்.
ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து ராணுவம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கொலை நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. கொலையாளிகள் இருவரும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கருதுகின்றனர்.