ஊட்டி: பகலிலும் ‘அடிக்குது குளிரு’... அறைகளில் அடைபட்ட சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி: ஊட்டியில் பகல் நேரத்திலும் குளிர் வாட்டி எடுப்பதால், சுற்றுலாப் பயணிகள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் அறைக்குள்ளாகவே முடங்கிக் கிடக்கிறார்களாம்.
அக்னி நட்சத்திரத்தில் வாட்டி எடுத்த சூரிய பகவான், சென்னைவாசிகளேயே தற்போது குளு, குளு என்று சூப்பர் சீசனில் தான் வைத்திருக்கிறார். சென்னையே இப்படியென்றால் ஊட்டியைப் பற்றி கேட்கவா வேண்டும்.
கோடையின் தாக்கத்தை குறைக்கவும், விடுமுறையைக் கழிக்கவும் ஊட்டி டூர் போன சுற்றுலாப் பயணிகள், ஊரின் அழகைச் சுற்றிப்பார்க்க இயலாமல் ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்குமளவுக்கு அங்கு குளிர் வாட்டி எடுக்கிறதாம்.
ஊட்டி...
கோடை சீசனை முன்னிட்டு கோத்தகிரியில் காய்கறி, கூடலூரில் வாசனை திரவியம், ஊட்டியில் ரோஜா மலர், குன்னூரில் பழ கண்காட்சி என கண்காட்சிகள் களை கட்டின. இவற்றை ரசிப்பதற்காகவே நிறைய சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்த வருஷம் குறைவு தான்...
ஊட்டி தாவரவியல் பூங்காவை ஏப்ரலில் 2.49 லட்சம், மே மாதம் 5.78 லட்சம் சுற்றுலா பயணிகள் ரசித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 28 ஆயிரம் பேர் குறைவு தான்.
பள்ளிகள் திறப்பு தாமதம்...
வெயிலின் கொடுமையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயுள்ளன. வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து நீடிக்கிறது.
பருவ மழை துவங்கியது...
சற்று முன் கூட்டியே பருவ மழை துவங்கியுள்ளதும் கடும் குளிருக்கு காரணம். குளிரால், மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் வெளியில் செல்ல முடியாமல், அறைக்குள்ளேயே முடங்கியுள்ளனராம்.
ரொம்ப கம்மியான சூடு...
ஊட்டியில், அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 8.3 டிகிரி செல்சியஸ்ம் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அழுகும் பூக்கள்...
பகலிலும் பொழியும் குளிரால், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடப்பட்ட 15 ஆயிரம் மலர் செடிகள் அழுகவும், உதிரவும் துவங்கியுள்ளன.
விதைகள் சேகரிக்கும் பணி...
ரோஜா பூங்காவிலும் இதே நிலை நீடிப்பதால், அடுத்த சீசனுக்காக பூங்காவில் விதைகள் சேகரிக்கும் பணி மழை நின்ற பிறகு துவங்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது.