பாமக முடிவால் கலவரமாக மாறியுள்ள ராஜ்யசபா தேர்தல் நிலவரம்... வெல்வாரா கனிமொழி?
சென்னை: யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பாமக அறிவித்து விட்டதால் ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் நிலை சிக்கலாகியுள்ளது. அக்கட்சி வேட்பாளர் கனிமொழி எப்படி வெல்லப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் உள்ள 6 இடங்களில் ஐந்து இடங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் 6வது இடத்துக்குத்தான் பெரிய அடிதடியே நடக்கிறது.
இன்று பிற்பகல் வரை திமுக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் இருந்தது. காரணம். பாமக எப்படியாவது தங்களை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பால். ஆனால் அதில் மண்ணைப் போட்டு விட்டார் டாக்டர் ராமதாஸ். இதனால் திமுக தரப்பு பெரும் அப்செட்டாகியுள்ளது.
மொத்த உறுப்பினர்கள் 234
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற தேவையான வாக்கு 34 ஆகும்.
ஆளும் கூட்டணியிடம் 170
ஆளும் கூட்டணியில் அதாவது அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் மொத்தம் 170 பேர் உள்ளனர். இதை வைத்து அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும், சிபிஐ வேட்பாளர் ராஜாவும் ஈசியாக வென்று விடுவார்கள்.
திமுகவிடம் இதுவரை 27
திமுகவைப் பொறுத்தவரை இதுவரை 27 பேர் சேகரமாகியுள்ளனர். திமுகவிடம் 23 பேர்உள்ளனர். மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் தலா 2 பேரை வைத்துள்ளன.
தேமுதிகவிடம் 22
தேமுதிகவைப் பொறுத்தவரை 22 பேர் தான் உள்ளனர். இது போக அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேர் உள்ளனர். இந்த 7 பேரும் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் எம்எல்ஏ பதவியை இழக்கவும் நேரலாம். இதனால் இந்த 7 பேரும் தேமுதிக வேட்பாளருக்கே வாக்களித்தாக வேண்டும்.
காங்கிரஸ் வசம் 5 பேர்
காங்கிரஸ் கட்சியிடம் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாமகவிடம் 3 பேர் உள்ளனர்.
பாமக முடிவால் யாருக்கு ஆபத்து...
யாருக்கும் ஆதரவில்லை என்று பாமக அறிவித்துள்ளது திமுகவுக்குத்தான் பெரும் பாதகமாக அமையும்.
எப்படி....
பாமகவின் ஆதரவு கிடைத்தால் திமுகவுக்கு 30 பேராக ஆதரவு உயரும். மேலும் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவையும் எப்படியும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அக்கட்சி இருந்தது. அதையும் சேர்த்தால் ஈஸியாக 34 ஐத் தாண்டி விடலாம். இந்தக் கணக்கில்தான் திமுக இருந்தது.
இப்ப திமுகவின் பிடி காங். கையில்...
ஆனால் டாக்டர் ராமதாஸின் முடிவால் தற்போது திமுகவுக்கு பெரும் பாதகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் கூட 34ஐத் தொட முடியாது. மேலும் ஒரு ஓட்டு தேவைப்படும்.
காங்கிரஸ் பேரம் பேசலாம்
இப்படிப்பட்ட நிலையில் தங்களது ஆதரவைத் தர காங்கிரஸும் தற்போது தெனாவெட்டாக பேரம் பேசும் நிலை உருவாகும். லோக்சபா தேர்தலில் கூடுதல் சீட் தர வேண்டும், தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும் என்ற ரீதியில் அக்கட்சி பேரத்தில் குதிக்கலாம்.
சரி அதிமுக 2வது ஓட்டு போடுவதாக இருந்தால்...
ஒருவேளை அதிமுக தரப்பில் 2வது ஓட்டைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதை கனிமொழிக்குப் போடுவார்களா அதாவது திமுகவுக்குப் போடுவார்களா அல்லது தேமுதிகவுக்குப் போடுவார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது
மெஜாரிட்டி ஓட்டு கிடைப்பவரே வெல்வார் என்பது தேர்தல் விதிமுறையாக உள்ளது. ஒருவேளை திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவையும் சேர்த்து 32 ஓட்டு கிடைத்தாலும் கூட அதிமுக 2வது ஓட்டை தேமுதிகவுக்குப் போட்டு விட்டால் கனிமொழி நிலை கந்தலாகி விடும். பெரும்பாலும் கனிமொழியைக் காப்பாற்றி விஜய்காந்துக்கு பெரும் காயத்தை உண்டாக்கவே அதிமுக முனையும் என்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை