இந்தியாவிடம் தஞ்சம் கோரும் ஸ்னோடென்: விக்கிலீக்ஸ்
அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகளை வெளிப்படுத்திய அந்நாட்டு குடிமகனான எட்வர்ட் ஸ்னோடென்(30) சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார். ஹாங்காங்கில் இருந்து தப்பியோடிய அவர் மாஸ்கோ விமான நிலைய பகுதியில் பத்திரமாக உள்ளார். அவர் தனக்கு தஞ்சம் அளிக்குமாறு ரஷ்யாவிடம் கேட்டுள்ளார்.
ஸ்னோடென் மேலும் ரகசியங்களை வெளியிடாமல் இருந்தால் அவருக்கு தஞ்சம் அளிக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் ஸ்னோடென் தனக்கு தஞ்சம் அளிக்கக் கோரி ஆஸ்த்ரியா, பொலிவியா, சீனா, க்யூபா, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நிகரகுவா, நார்வே, போலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வெனிசுலா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக அவர் தஞ்சம் கோரி அயர்லாந்து மற்றும் ஈக்விடாரிடம் கோரிக்கை விடுத்தார். அமெரிக்க உளவு நிறுவன கான்டிராக்டரான ஸ்னோடென் மேலும் சில ரகசியங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.