விருதுநகரில் ஒழுகும் பேருந்துகள்… மழையில் நனையும் பயணிகள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளுக்கு ஓடும் அரசுப் பேருந்துகள் ஓட்டை, உடைசலோடு இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒழுகும் பேருந்தில் பயணம் செய்வதால் நனைந்து போய் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 371,தனியார் நிறுவனங்களின் சார்பில் 208 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும் பாலான பஸ்கள், காலாவதியான நிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தினம் பல்வேறு விதமான திகில் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
பல பேருந்துகளில் இருக்கையே இல்லை என்று கூறப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறு கண்ணாடி பொருத்தப்படுவதில்லை.
அங்காங்கே கம்பிகள் நீண்டு கொண்டும், இருபக்கமும் உள்ள தகரங்கள் தொங்கிய படி, பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்சின் உள்ளே பயணிகளும், வெளியே நடந்து செல்லும் பொதுமக்களும் மரண பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில பேருந்துளில் படிக்கட்டுகளை காணவில்லை என்று கூறுகிறார்கள்.
தற்போது மழை சீசன் உள்ளதால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முழுவதும் நனைத்து பணிக்கு செல்கின்றனர். எனவே அரசும், தனியார் பேரூந்துகளும் இதில் போதிய கவனம் செலுத்தி பேரூந்துகளை மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.