பசுமைத் தீர்ப்பாயம் நீதி வழங்கத் தவறியதால்தான் சுப்ரீம் கோர்ட் போனோம்- வைகோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா தூத்துக்குடியில் இன்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தலைமை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் நாசரேத்துரை, நெல்லை மாவட்ட நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் 2ம் கட்ட தேர்தல் நிதியாக ரூ.70லட்சத்தை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். அதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடியில் மக்களை பாதித்துவரும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால் உரியநீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளேன். இதில் உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
சேது சமுத்திர திட்டத்தினை செயல்படுத்தவேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும் நேரத்தில் மீனவர்களின் அச்சத்தை முழுமையாக போக்கியபின்பு மீனவர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றவேண்டும்.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தகூடாது, இதற்கு உறுதுணையாக இருக்கும் இந்திய அரசைக்கணடித்தும், தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசினை கண்டித்தும் நாளை திருச்சி வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கறுப்புக்கொடி காட்டப்படுகிறது. இதில் என்னோடு பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் மதிமுக கண்டிப்பாக போட்டியிடும். தமிழகத்தில் தற்போது அரங்கேறிவரும் மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்கும் வகையிலான படுகொலைகள், கற்பழிப்பு போன்ற குற்றசெயல்கள் இந்த ஆட்சியில் மட்டுமல்லாது, இதற்கு முந்தைய ஆட்சியிலும் நடந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் தமிழக அரசு தனது கடமையை தவறாது செய்துவருகிறது. இருந்தாலும் இதுபோன்ற குற்றசெயல்களுக்கு பின்னால் மதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
மதுவை ஒழிக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் நடைபயணம் மேற்கொண்டோம். தற்போது இதனை வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இதுபோன்று மதுவை ஒழிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்றார்.