கிடைத்த தகவலை சொன்னேன்..: ராஜ்யசபாவில் ஆண்டனி விளக்கம்! பிரதமருடன் ஆலோசனை!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியானது தொடர்பான தமக்கு கிடைத்த தகவலையே நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன் என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நேற்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தெரிவித்தார். ஆனால் முன்னதாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின. முன்னதாக காலையில் ஏ.கே. ஆண்டனி சபைக்கு வரவில்லை. பின்னர் பகலில் சபைக்கு வந்த போது இதே பிரச்சனையை எம்.பிக்கள் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவர், எனக்குக் கிடைத்த தகவலை இந்த சபைக்குத் தெரிவித்தேன். தற்போது ராணுவ தலைமை தளபதி நிகழ்விடத்துக்குச் சென்றுள்ளார். அவர் தெரிவிக்கும் தகவல்களையும் நாடாளுமன்றத்தில் நிச்சயம் தெரிவிப்பேன். நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.
இதைத் தொடர்ந்தும் அமளி நீடிக்கவேசபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications