தெலுங்கானாவுக்கு எதிராக ஆக.11-ல் ரயில் மறியல்! ரயிலை மறித்தால் ஜெயில்- போலீஸ்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான ராயலசீமா, கடலோர ஆந்திர மக்களின் போராட்டம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. நாளை மறுநாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ரம்ஜானையொட்டியே நேற்று இன்றும் சில கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை.
கார், லாரிகள் இரவு நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது. பகலில் மக்கள் சாலையில் திரண்டு நின்று அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான போராட்டக் குழு குண்டூரில் கூடி முடிவு செய்தது. பிரிவினைக்கு எதிராக நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்றும் இக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றால் தென் இந்தியாவை இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களும் இந்த ராயலசீமா, கடலோர ஆந்திராவில் இருப்பதால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இதனால் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோருக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. ரயில் போக்குவரத்துக்கு சிறிய தடை ஏற்படுத்தினாலும் அவர்கள் ஜாமீன் கிடைக்காத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். ரயில்வே சட்டம் அவர்கள் மீது பாயும். நிச்சயம் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. தினேஷ் ரெட்டி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.