இளவரசர் சார்லஸ் 65வது பிறந்தநாள்: பல கோடி ருபாயில் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வர தம்பதி
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள்.
லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண்ட விருந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர் சரஸ் தம்பதியினர். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரம்மாண்ட விருந்து தயார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள் இத்தம்பதிகள்.
பிறந்தநாள் விருந்தில் லண்டன் இசைக்குழுவான பில்ஹார்மோனியா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மது விருந்தும் அளிக்கத் திட்டமிட்டுள்ளார் சைரஸ். இந்தப் பிரமாண்ட விழாவினை பக்கிங்ஹாம் அரண்மனையில் நடத்த ராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல இந்தியர்கள் 250 பேர் மட்டும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இளவரசர் சார்லஸின் இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொள்வாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.