எரிபொருள் கசிவு.. ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவும் பணி திடீர் நிறுத்தம்!
தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-14 ஐ எடுத்துக் கொண்டு ஜிஎஸ்எல்வி- டி5 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து இன்று மாலை 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவிருந்தது. இதற்கான கவுண்ட் டவுனும் நேற்று காலை 11.50 மணிக்கு துவங்கியது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவ ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் இருக்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் 49.13 அடி உயரம் கொண்டது. அதன் எடை 414.75 டன்னாகும். இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட இருந்த ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-14 1,982 கிலோ எடை கொண்டது. ராக்கெட்டின் மதிப்பு ரூ.160 கோடியாகும். செயற்கைக்கோளின் மதிப்பு ரூ.45 கோடியாகும்.
இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் எப்பொழுது ஏவப்படும் என்று பின்னர் அறிவிக்கப்படும்.