இளவரசி டயானாவின் மரணத்திற்கு இங்கிலாந்து ராணுவம் காரணமா?
லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின் இங்கிலாந்து ராணுவத்தின் சதி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இங்கிலாந்து இளவரசி டயானா பாரீஸில் நடந்த கார் விபத்தில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மரணம் அடைந்தார். அவருடன் காரில் இருந்த அவரது காதலரும் பலியானார்.
விபத்தில் இறந்த டயானாவின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவரது மரணத்திற்கு பின்னால் இங்கிலாந்து ராணுவத்தில் உள்ள துப்பாக்கிசுடும் வீரர் ஒருவர் உள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து ராணுவத்தின் சதி
சிஎன்என் தகவல்களின்படி பெயர் தெரிவிக்காத அந்த வீரர் தனது மனைவியிடம் இங்கிலாந்து விமானப்படையின் கமாண்டோ பிரிவு டயானா மரணத்திற்கு பின் இருந்ததாக தெரிவித்தாராம்.
சன்டே பீபிள்
அந்த வீரரின் மனைவியின் பெற்றோர் இது குறித்து எழுதிய 7 பக்க கடிதத்தை பார்த்ததாக சன்டே பீபிள் செய்தித்தாள் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த செய்தித்தாளுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது குறித்து அறிந்த இங்கிலாந்து போலீசார் இத்தகவலின் நன்பகத்தன்மை குறித்து விசாரித்து வருகின்றனர்.
விவாகரத்தான மறு ஆண்டே
டயானா இளவரசர் சார்லஸை கடந்த 1996ம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தான மறு ஆண்டே அவர் பாரீஸில் விபத்தில் பலியானார். அவர் சென்ற கார் அதிகவேத்தில் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
மரணத்திற்கு பின்னால்
டயானாவின் மரணத்திற்கு பின்னால் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உளவுத்துறை இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு. ராஜ குடும்பத்தினர் தான் திட்டமிட்டு டயானாவை கொன்றுவிட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.