சிரியா ராணுவம் ரசாயன குண்டு தாக்குதல்: தூக்கத்தில் பலியான ஆயிரக்கணக்கான அப்பாவிகள்!
டமாஸ்கஸ்: சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய ரசாயன வெடிக்குண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலகக்கோரி புரட்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிர்பிழைக்க வேண்டி 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ராணுவத்தினர் நடத்திய ரசாயன வெடிக்குண்டு தாக்குதலில் 1300 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ரசாயன குண்டுகள்
தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அயர்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் நேற்று இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடத்தப்பட்ட ரசாயன குண்டு தாக்குதலை அறியாமலேயே பலர் மரணமடைந்துள்ளனர்.
விஷவாயு தாக்குதல்
இந்த விஷவாயு தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் நுரையீரலுக்குள் ஊடுருவிய நச்சுப் பொருட்கள், நரம்பு மணடலத்தை பாதித்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர்.
ஐ.நா கண்டனம்
இந்த சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆராயவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக கூடுகிறது.இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பதறவைக்கும் வீடியோ
இதற்கான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது உலகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் மூச்சுத்திணறி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பொதுமக்கள் மருத்துவமனைகளில் நிரம்பியிருக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.இதில் பலி எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொத்து கொத்தாய் சடலங்கள்
இதுபோன்று பல இடங்களில் நடத்தப்பட்ட இரசாயனக்குண்டு தாக்குதலுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை போராளிகள் வெளியிட்டுள்ளனர். இருந்தும் இதுகுறித்து உண்மை நிலை என்ன என்று இன்னும் ஊர்சிதப்படுத்தப்படவில்லை.
ஆட்சியாளர்கள் மறுப்பு
சிரியா ஆட்சியாளர்கள் இதனை மறுத்துள்ளனர். ஐ.நா. இரசாயன ஆயுதக்குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சி என்று சிரியா செய்தி நிறுவனம் சானா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய உடனடியாக சம்பவப் பகுதிகளுக்கு ஐ.நா. குழுவிர் விரைய அரேப் லீக் வலியுறுத்தியுள்ளது.