மானாமதுரை டிஎஸ்பி வெள்ளத்துரை மாற்றம்?
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுவிட்டதாக கடந்த இரண்டு தினங்களாக பரபரப்பு உருவாகியுள்ளது. டி.எஸ்.பி வெள்ளைத்துரையை மாற்றம் செய்யக்கூடாது என்று நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் பொதுமக்கள்
கடந்த அக்டோபர் 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜையின் போது மானாமதுரை அருகே வேம்பத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின்சுதன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மானாமதுரை டிஎஸ்பியாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார்.
அதுவரை மானாமதுரையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி போட்டு ஏழை எளியவர்களின் இடம், வீடு உள்ளிட்டவற்றை போலீ ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து அராஜகம் செய்து வந்தனர். தட்டி கேட்பவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவது , போலீசாரையே ஓட ஓட விரட்டுவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பல் பதுங்க தொடங்கியது. ஆனாலும் டிஎஸ்பி வெள்ளத்துரை தனது அதிரடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவராணம் தேடி தந்தார்.
மானாமதுரையை ஆட்டுவித்து அடுத்தவர் சொத்துகளை போலீ ஆவணங்கள் மூலம் பட்டா போட்ட பிரபல தொழிலதிபர், பத்திர எழுத்தர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு நபர்களை கைது செய்து சிறையிலடைத்தார். இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். நேர்மையான போலீசாரும் மிகுந்த சந்தோசத்துடன் டிஎஸ்பிக்கு உறுதுணையாக பணியாற்றினர்.
இந்நிலையில் பாப்பாங்குளத்தில் ஓட்டு போடாததால் தலித் மக்களின் வீடுகளை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு ஜேசிபி இயந்திரம் மூலம் தரைமட்டமாக்கினார். கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகன் மனைவி சித்திரவள்ளி என்பவர் தான் சீனிவாசன் என்பவரிடம் இரண்டு செண்ட் நிலத்தை வாங்கியதாகவும் அதில் அரசு புறம்போக்கு நிலத்தை சீனிவாசன் ஆக்ரமித்து தன்னுடைய நிலத்தையும் ஆக்ரமிக்க முயல்வதாகவும் புகார் செய்தார்.
விசாரணை செய்த டிஎஸ்பி வெள்ளத்துரை ஆகஸ்ட் 15ம் தேதி நேரில் ஆய்வு செய்து வருவாய்துறையினர் உதவியுடன் அந்த இடத்தை சர்வே செய்து நடவடிக்கை எடுத்தார். அவருக்கு உதவியாக வந்த ஊராட்சி மனற் தலைவர் அம்சவள்ளியின் கணவர் தங்கராசு அந்த பகுதியில் தனக்கு ஓட்டு போடாதவர்களின் வீடுகளையும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடித்து தரை மட்டமாக்கினார். 16ம் தேதி அந்த தெருவில் ஆக்ரமிப்புகள் இருப்பதால் அதனையும் அகற்ற டிஎஸ்பி சொல்லிவிட்டார் என கூறி தங்கராசு சுப்ரமணியன், வேணி உள்ளிட்ட 26 வீடுகளையும் ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.
பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவரவே ஏற்கனவே டிஎஸ்பியால் பாதிக்கப்பட்ட அனைத்து கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வெள்ளத்துரைதான் வீடுகள் இடிபட்டதற்கு காரணம் என திரும்ப திரும்ப குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாப்பாங்குளம் கிராமமக்களிடம் அவர்களுக்கு புதிதாக வீடு கட்டி தர போராட போவதாகவும் அரசு தரப்பில் குடும்பத்திற்கு 5 லட்சம் வாங்கி தருவதாகவும் அதில் ஒரு லட்சத்தை தங்கள் கட்சிக்கு தரவேண்டும் என்றும் டிமாண்ட் வைத்து டிஎஸ்பிக்கு எதிராக போராட ஆரம்பித்தனர்.
எஸ்ஐ ஆல்வின்சுதன் கொலைக்கு பின் சமீப காலமாகத்தான் போலீசார் தங்கள் கடமையை செய்ய ஆரம்பித்துள்ளனர். கடமை தவறிய போலீசார் பலரும் தங்களை சிறிது சிறிதாக மாற்றி கொண்டு வரும் வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுமென்றே இந்த பிரச்சனையில் டிஎஸ்பியை இங்கிருந்து மாற்றவேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து பிரச்சனையை கிளப்பி வருகின்றனர்.
கலெக்டரின் விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு ஆகஸ்ட் 18ம் தேதி தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை டிஎஸ்பி வெள்ளத்துரைதான் இடித்தார். தான் வீட்டில் இருந்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனை அதிகாரிகளும் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஆகஸ்ட் 18ம் தேதி டிஎஸ்பி வெள்ளத்துரை சிவகங்கையில் முஸ்லீம் சமூதாயத்தினர் பிரச்சனையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை வரை பங்கேற்றுள்ளார். இது எஸ்பி முதற்கொண்டு அனைவருக்கும் தெரியும், இதுசம்பந்தமாக உளவுத்துறையும் முதல்வருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருவதால் அரசு தரப்பில் டிஎஸ்பியை மாற்ற போவதாக பேச்சு எழுந்துள்ளது.
டிஎஸ்பி வெள்ளத்துரையை நேற்று முதல் மதுரைக்கு மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. டிஎஸ்பியிடம் கேட்ட போது எங்கு சென்றாலும் சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய பணிகள் தொடரும் என்று கூறினார். எஸ்பி அஸ்வின் கோட்னீசிடம் கேட்ட போது வெள்ளத்துரை மாற்றம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று மறுத்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலரும் டிஎஸ்பியை மாற்றியாச்சு என தொடர்ந்து புரளியை கிளப்பி வருகின்றனர். இதற்கு மாற்றாக டிஎஸ்பியை மாற்றம் செய்ய கூடாது என பொதுமக்களும் போராட தயாராகி வருகின்றனர்.