சிரியா மீது புதனன்று தாக்குதல் நடத்துகிறது யு.எஸ்! பிரான்சும் இணைகிறது!!
வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமையன்று அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுடன் பிரான்சும் இந்த ராணுவ நடவடிக்கையில் இணையப் போவதாக அறிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது அமெரிக்காவின் புகார். இந்த தாக்குதலில் 1300 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழு ஆய்வு நடத்தியிருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ராணுவ நடவடிக்கை- யு.எஸ்.
இதைத் தொடர்ந்து சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதற்காக நட்பு நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.
ரசாயன குண்டு தாக்குதலுக்கு ஆதாரம் இருக்கிறது
மேலும் சிரியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.
ராணுவ நடவடிக்கைக்கு இங்கிலாந்தில் எதிர்ப்பு
இதனிடையே அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த ஒப்புதல் கோரும் தீர்மானம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த போவதில்லை என்று இங்கிலாந்து அறிவித்துவிட்டது.
அமெரிக்காவுடன் இணையும் பிரான்சு
ஆனால் இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.