வன்சாரா ராஜினாமா விவகாரம்.. நாடாளுமன்றத்தில் பாஜகவை 'கார்னர்' செய்த கட்சிகள்!

வன்சாரா விவகாரம் என்ன?
1987ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் பெருக்கமானவர் என்று கூறப்படுகிறவர். போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் இருக்கும் வன்சாரா, அண்மையில் தமது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தில் மோடி அரசு மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தார் வன்சாரா.
ராஜ்யசபாவில்..
நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல் கோப்புகள் திருடுபோய்விட்டது என்று கூறி இரு சபைகளையும் முடக்கி வைத்த பாரதிய ஜனதாவுக்கு நேற்றைய நாள் துயரமானதாகிவிட்டது. ராஜ்யசபாவில் வன்சாராவின் ராஜினாமா கடிதம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இது மாநில விவகாரம்.. அதை இங்கு விவாதிக்க தேவையில்லை என்று மட்டும் கூறி அமைதியாக இருந்துவிட்டது. காங்கிரஸ் எம்.பிக்களும் தங்களது பங்குக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
லோக்சபாவில்..
இதேபோல் லோக்சபாவிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தும் பதாகைகளை காங்கிரஸ் எம்.பிக்கள் தூக்கிப் பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் நாடாளுமன்ற இரு சபைகளையும் ஒட்டுமொத்தமாக முடக்கி வைத்திருந்த பாரதிய ஜனதா கட்சி நேற்று தனிமைப்படுத்த நேரிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications