தள்ளாடும் நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கம்!
நாகர்கோயில்: நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும்.
இந்த ரயில் நிலையங்கள் ரயில்வேதுறைக்கு வரும் வருமான அடிப்படையில் தற்போது ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளன.
நாகர்கோவிலில் ரூ. 26 கோடி வருமானம்
நாகர்கோவில் ரயில் நிலையம் மூலம் ரயில்வேதுறைக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் 26 கோடி 27 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது.
கன்னியாகுமரியில் ரூ. 11 கோடி
கன்னியாகுமரி ரயில் நிலையம் 11 கோடி மூன்று லட்சங்கள் வருமானம் கிடைத்தது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தற்போது நான்கு நடைமேடைகள், ரயில்களை பராமரிக்கும் பிட்லைன்கள் மூன்றும், காலி ரயில்பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள் மூன்றும், சேதமடைந்த ஆன ரயில் பெட்டிகளை நிறுத்திவைக்கும் சிக்லைன் ஒன்றும், ரயில்பெட்டிகளை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளும் சிறிய அளவிலான பனிமனை ஒன்றும் உள்ளது.
குறைந்த வசதிகள்
திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில், கோட்டத்தில் உள்ள மற்ற பனிமனைகளை ஒப்பிடும் போது மிககுறைந்த அளவே அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை பயன்படுத்தி குமரி மாவட்ட பயணிகளுக்கு மிககுறைந்த அளவே பயன்படும்படியாகவும் கேரளா பயணிகளுக்கு வேண்டி நாகர்கோவிலிருந்து ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் தமிழக பயணிகள் பயன்படும் படியாக புதிய ரயில்கள் இயக்கமுடியாதபடி நெருக்கடியாக உள்ளது.
10 வருடத்திற்கு வாய்ப்பில்லை
இதனால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிருந்து நமது மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் விதமாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக அடுத்த 10 வருடங்களுக்கு புதிய ரயில்கள் இயக்க வசதி வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
காலதாமதம்
கடந்த சனிக்கிழமை மிகபெரிய அளவில் சுமார் 7 மணிநேரம் காலை 5 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இடநெருக்கடியால் சிக்கி தவித்து அனைத்து ரயில்களும் பல மணி நேரங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.
வயலில் விழுந்த என்ஜின்
இதைப் போல் 25-07-2012 தேதி இடநெருக்கடி காரணமாக கோவை - நாகர்கோவில் ரயிலின் என்ஜின் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதே ஆண்டு இன்னமும் பல விபத்துகள் நடைபெற்றன. ஆனால் இந்த விபத்துகளில் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இவ்வாறு அடிக்கடி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி மற்றும் ரயில்வே ஊழியர்கள் பற்றாகுறையின் காரணமாக விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
தொடரும் புறக்கணிப்பு
இந்த விபத்துகள் நடக்க முக்கிய காரணம் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் புறக்கணிக்கபடுவதே ஆகும். இது போன்ற விபத்துகள் வராதபடி நிவர்த்தி செய்து பயணிகள் பாதுகாப்பான பயணத்துக்கு திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி ஆகும்.
விரிவாக்கம் அவசியம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தை போர் கால அடிப்படையில் விரிவாக்கம் செய்தால் மட்டுமே புதிய ரயில்கள் இயக்கவும் மற்றும் ரயில் பெட்டிகளின் மாற்றுவதால் ஏற்படும் விபத்துகள் தவிற்க முடியும். நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வந்தது.
ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு
இதன் பலனாக 2006-07 நிதிஆண்டில் 24 பெட்டிகள் கொண்ட இரண்டு நடைமேடைகள், 18 பெட்டிகள் நீளம் கொண்ட இரண்டு நடைமேடைகள், கூடுதலாக ஏழு ஸ்டேபளிங் லைன்கள் நிறுவுவதற்கு என ஒப்புதல் பெறப்பட்டு ஏழு கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டப் பணிகள் முடிந்தன
இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்ட பணிகளாக 18 பெட்டிகள் கொண்ட முட்டி நிற்கும் விதமாக நடைமேடை(சென்னை சென்ட்ரலில் இருப்பது போன்று) இரண்டு நடைமேடைகளும், ஒரே நேரத்தில் இரண்டு மார்க்கங்களிலிருந்து ரயில்கள் வருவதற்கான வசதி, அனைத்து நடைமேடைகளையும் இணைப்பதற்கான நடைமேடை மேம்பாலம் போன்றவை ஆகும். இந்த பணிகளுக்கு 7.06 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவுபெற்று விட்டன.
2வது கட்டப் பணிகள் எப்போது...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட இரண்டாவது கட்ட பணிகளை உடனடியாக துவங்கப்பட வேண்டும். இவ்வாறு துவங்கினால் மட்டுமே இது பொன்ற பிரச்சனைகளிலிருந்து நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். இரண்டாவது கட்ட பணிகளில் இரண்டு 24 பெட்டிகள் கொண்ட புதிய நடைமேடைகள், ஆறு புதிய ஸ்டேபளிங் லைன்கள் மற்றும் முதல் கட்ட பணியில் முடிக்காமல் உள்ள நடைமேடை 1பி ஐயும் சேர்த்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்க திட்டமிடப்பட்டது.
ஒரு நடவடிக்கையும் இல்லை
இந்த இரண்டாம் கட்ட விரிவாக்க பணிக்கு வேண்டி திருவனந்தபுரம் கோட்ட அதிகாரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சிதலைவருக்கு 02-06-2009 அன்று நாகர்கோவில் ரயில் நிலையம் அருகில் சர்வே நம்பர் உட்படி அனைத்து தகவல்களுடன் 9.29 ஹைக்டேர் நிலம் ஆர்ஜிதப்படுத்துவதற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
நினைவூட்டியும் பயனில்லை
இதை தொடர்ச்சியாக ரயில்வேதுறை பல நினைவூட்டும் கடிதங்கள் அனுப்பியும் தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் இல்லை. கடைசியாக அனுப்பபட்ட கடிதத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதப்படுத்தி ரயில்வேதுறையிடம் ஒப்படைக்கப்படவில்லையென்றால் ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்படும் என்று குறிப்படப்பட்டுள்ளது.
நிறைவேறாத கோரிக்கைகள்
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஹைதராபாத்துக்கும், டெல்லி, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு தினசரி ரயில்களும், திருவனந்தபுரம் வழியாக மங்களுர், கோவா போன்ற இடங்களுக்கும் தினசரி ரயில்களும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வழியாக வேளாங்கண்ணி, திருச்சி போன்ற இடங்களுக்கு தினசரி ரயில் இயக்க என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பலரால் ரயில்வே துறையிடம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த ரயில்கள் இயக்க போதிய பிட்லைன்கள், நடைமேடைகள், ஸ்டேபளிங் லைன்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ரயில்நிலையத்தில் இல்லை என்ற காரணத்தை கூறி ரயில்வே நிர்வாகத்தால் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.
சுற்றுப் பாதையில்
ஆனால், கேரளா பயணிகளுக்கு வேண்டி நாகர்கோவிலிருந்து சுற்று பாதையில் புதிய ரயில்களை இயக்கிவருகிறது. தற்போது ரயில்நிலைய வளர்ச்சிக்காக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்து தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. ஆண்டுகள் மூன்று ஆகியும் நினைவூட்டும் கடிதங்கள் பல சென்ற பின்பும் குமரி மாவட்ட நிர்வாகம் மெத்தன போக்கையே காட்டுகிறது. இந்த நிலை நீடித்தால் இந்த நிதி ஆண்டில் நாகர்கோவில் ரயில் நிலையவளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பப்பெறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெருவிக்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனம்
ரயில்வேயில் பின்தங்கி இருக்கும் நமது மாவட்டம் வளர்ச்சி அடைய இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரயில்வே துறை கேட்கும் நிலத்தை ஆர்ஜிதம் செய்து ரயில்வே துறையிடம் ஒப்படைப்பது நமது மாவட்ட நிர்வாகத்தின் கடமை ஆகும். இதற்கு நமது பாராளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினர்களும் துணைநிற்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினரின் பதவி காலத்துக்குள் இதனை அவர் செய்து முடித்தால் குமரி மாவட்ட ரயில்வே துறை வளர்ச்சியில் ஒரு மைல்கல்ஆக அமையும்.