கர்நாடகாவில் எங்களை ஜெயிக்க வெச்சதே நீங்கதானே.. பாஜகவின் அனந்தகுமாருக்கு பதிலடி கொடுத்த ப.சி.!!
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியின் கொள்கைகளும் காரணம் என்று தொடர்ந்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி வருகிறார். லோக்சபாவில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் பேசிய பாஜகவின் அனந்த்குமார் இதைக் குறிப்பிட்டு பேசினார்.
அத்துடன் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ப. சிதம்பரம்தான் பொறுப்பு.. அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால் வெளியேறுங்கள்.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியது.. இப்போது வேலையும் இல்லை.. வளர்ச்சியும் இல்லை.. பொருளாதார சரிவைதான் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று சாடிக் கொண்டிருந்தார்.
அப்போடு குறுக்கிட்டுப் பேசிய ப.சிதம்பரம், அனந்த்குமார் இப்படி ஆவேசமாக கொந்தளிப்பாக பேசுவதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.. எங்களுடன் மிகவும் நெருக்கமானவர்...வேறு யாரையும் விட கர்நாடகாவில் எங்கள் காங்கிரஸ் கட்சி எளிதாக வெற்றி பெறுவதற்காக நிறையவே பாடுபட்டவர் என்று கூற ஒட்டுமொத்த அவையே அனந்த்குமாரை நோக்கி பார்த்து புன்னகைத்தது.
அதாவது கர்நாடகாவில் எதியூரப்பாவை பாஜகவில் இருந்து வெளியேறி கட்சி உடையக் காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் அனந்தகுமார். அனந்தகுமாரின் இந்த உள்ளடி, பிளவு வேலைகளால் காங்கிரஸ் கட்சி மிக எளிதாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையே ப.சிதம்பரம் லோக்சபாவில் குறிப்பிட்டுப் பேச, அதுவரை ஆவேசத்தை கொட்டிக் கொண்டிருந்த அனந்தகுமார் அமைதியாகிப் போனார்.