ஸ்கூலுக்கு வரும்போது பைபிள் கட்டாயம்! உத்தரவு போட்ட நிர்வாகம்! களமிறங்கிய தேசிய குழந்தைகள் நல ஆணையம்
பெங்களூர்:பெங்களூரில் உள்ள ரிச்சர்ட் நகர் தனியார் பள்ளியில் மாணவர்கள் கட்டாயம் கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபிள் எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூர் கலெக்டருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் பிரச்சனை வெடித்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் கட்டாயம் பைபிள் கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தமிழ்நாட்டிலும் ஹிஜாப் தடைகோரி வழக்கு... விசாரணைக்கே ஏற்காத உயர்நீதிமன்றம் - கடைசியில் தள்ளுபடி
பைபிள் கட்டாயம்
பெங்களூர் ரிச்சர்ட்ஸ் டவுன் கிளாரென்ஸ் உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை படிவத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. இந்த வேளையில் ‛‛மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் பைபிள் எடுத்து வர வேண்டும். பைபிளை பள்ளிக்கு கொண்டுவர, மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது'' என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு
பள்ளியின் இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதாவது பள்ளியின் இந்த நடவடிக்கை என்பது கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களையும் பைபிள் படிக்க கட்டாயப்படுத்துவதாக வலதுசாரி அமைப்பினர் கூறுகின்றனர். இதனால் பள்ளி நிர்வாகம் இதை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
பள்ளியின் நடவடிக்கைக்கு இந்து ஜனஜக்ருதி சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், ‛‛பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிளை படிக்க வற்புறுத்துகிறது. மேலும் அந்த மாணவர்களின் மத உரிமைகளை பறிக்க சதி நடக்கிறது. கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேசிடம் புகார் அளித்துள்ளோம். மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வோம்" என்றார்.
பள்ளி நிர்வாகம் கூறியது என்ன
இதுபற்றி பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‛‛இந்த பிரச்சனை குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்வோம். அவர்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கியவுடன், நாங்கள் அதை முன்னெடுத்துச் செல்வோம். இந்த விவகாரத்தில் எங்கள் வழக்கறிஞர்கள் விளக்கம் அளிப்பார்கள்'' என்றார்.
தேசிய ஆணையத்தில் புகார்
இதற்கிடையே சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையம் பெங்களூர் கலெக்டருக்கு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளாவது:
7 நாளில் அறிக்கை
பெங்களூரு கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு எதிராக புகார் வந்துள்ளது. புகாரில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் பள்ளியில் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் 2&(3), சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 ஆகியவை மீறியிருப்பது இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.