கூடுதலாக வெறும் 18 ஐசியு படுக்கைகள்.. எடியூரப்பா அரசு அலட்சியம்.. பல மடங்கு அதிகரித்த உயிரிழப்பு
பெங்களூரு: கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகராகப் பெங்களூரு உருவாகியுள்ள நிலையில், அங்குக் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 18 ஐசியு படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை கர்நாடகாவில் மோசமடைய தொடங்கியுள்ளது. மாநிலத்தில் நிலைமை கையை மீறி சென்றுவிட்டதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
குறிப்பாகக் கர்நாடக வைரஸ் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரு உள்ளது. அங்கு மருத்துவமனைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது.

கொரோனா முதல் அலை
கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டபோதே பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பின. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அப்போதே நிரம்பின. இதன் காரணமாக நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டர். இதையடுத்து அப்போது ஐசியு படுக்கைகளை அதிகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் வேகம் காட்டினர். இருப்பினும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொரோனா பரவலின் தீவிர தன்மை குறையத் தொடங்கியது.

இரண்டாம் அலை இன்னும் மோசம்
அதன் பின்னர் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களும் ஐசியு படுக்கைகளை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதனால் தற்போது கொரோனா இரண்டாம் அலையில் பெங்களூருவில் மீண்டும் ஐசியு படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளில் ஆக்சிஜன் உதவி தேவைப்படும். ஆனால் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஏற்கனவே ஐசியு படுக்கைகளும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளிலேயே அட்மிட் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர் வசதி
பெங்களூருவில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது, அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதி கொண்ட 99 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 77 படுக்கைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 22 படுக்கைகள் நகரிலுள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இருந்தன. இதையடுத்து, படுக்கைகளை அதிகரிக்க மத்திய அரசு 300 வென்டிலேட்டர் பெங்களூருவுக்கு வழங்கியிருந்தது.

கூடுதலாக வெறும் 18 படுக்கைகள்
ஆனால், வெறும் 18 ஐசியு படுக்கைகள் மட்டும் இந்த ஆண்டு பெங்களூருவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மற்ற வென்டிலேட்டர்கள் அனைத்து மருத்துவமனைகளில் இப்போது வெறும் பேக்அப்-ஆக மட்டுமே உள்ளன. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாலேயே புதிய வென்டிலேட்டர்களை பயன்படுத்த முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெங்களூருவில் உள்ள ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உச்சத்தில் கொரோனா
பெங்களூருவில் கொரோனா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. ஏப்ரல் மாதம் மட்டும் பெங்களூருவில் 1,200 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதற்கு ஐசியு படுக்கைகளைப் போதியளவில் அதிகரிக்காததே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications