முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூரில் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பெங்களூர்: பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் மிகவும் வலிமையான அரசியல்வாதியாக பார்க்கப்படுகிறார். அதேபோல் அதிக சொத்து மதிப்பு கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர்.
பல்வேறு விதமான நிதி முறைகேடு புகார்கள் இவர் மீது உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆம்பிடென்ட் மார்க்கெட்டிங் முறைகேட்டில் இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
என்ன மோசடி
கர்நாடகாவைச் சேர்ந்த 'ஆம்பிடென்ட் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்' பெரிய நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டு இருக்கிறது. சையத் அஹமது பரீத்தின் இந்த நிறுவனம் மக்களிடம் அதிக வரி தருவதாக கூறி முதலீடாக பணம் பெற்றுள்ளது. ஆனால் பணத்தில் ஒரு ரூபாய் கூட திரும்ப தராமல் ஏமாற்றி இருக்கிறது. இதையடுத்து சையத் அஹமது பரீத் போலீசால் கைது செய்யப்பட்டார்.
பணம் வாங்கினார்
சையத் அஹமது பரீத்தை விடுதலை செய்வதாக ஜி.ஜனார்த்தன ரெட்டி உறுதியளித்துள்ளார். இதனால் ஜி.ஜனார்த்தன ரெட்டி சையத்திடம் 20 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். போலீஸ் சையதிடம் நடத்திய விசாரணையில் இது அம்பலம் ஆனது. இதையடுத்தான் ஜி.ஜனார்த்தன ரெட்டியும் இந்த வழக்கிற்குள் கொண்டு வரப்பட்டார்.
ஆஜர் ஆனார்
இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த சில நாட்களாக ஜி.ஜனார்த்தன ரெட்டியை தேடி வந்தனர். யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் ஆனார். பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் தலைமையக்கதில் ஆஜர் ஆனார். நேற்று அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று காலையும் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் அவருக்கு எதிராக நிறைய ஆதரங்கள் உள்ளதால் தற்போது ஜி.ஜனார்த்தன ரெட்டி போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அளித்த முன் ஜாமீன் மனு ஏற்கனவே கர்நாடக ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இவரது கைதையொட்டி இவரின் உறவினர்கள் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.