'அஞ்சாதே' பட பாணியில்.. விறுவிறு "ஆபரேஷன்".. சிறுவனை கடத்தியவர்களை தட்டித் தூக்கிய போலீஸ்!
பெங்களூர்: பெங்களூரில் சிறுவனை கடத்திச் சென்ற கடத்தல்காரர்களை போலீஸார் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு 'அஞ்சாதே' பட பாணியில் தட்டி தூக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் குழந்தைகளை கடத்திச் சென்று பெற்றோரிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்களில், சில சமயம், பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தாலோ அல்லது போலீஸாரை நாடினாலோ அந்தக் குழந்தைகளை கொலை செய்யும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்நிலையில், பெங்களூரில் இதுபோன்ற கடத்தல்காரர்களை போலீஸார் பக்காவாக புலனாய்வு செய்து பிடித்து கைது செய்துள்ளனர். அதுகுறித்த விபரம் வருமாறு:
நட்ட நடு காட்டில் கணவர் சடலம்.. கிழிந்த ஆடைகளுடன் கூச்சல் போட்ட மனைவி.. மிரண்ட தென்காசி போலீஸார்
\
நள்ளிரவு புகுந்த கடத்தல்காரர்கள்
பெங்களூரின் தனிசான்ட்ரா 'மன்யட்டா ரெஸிடென்சி' பகுதியில் வசித்து வருபவர் கவுரவ் (45). ஒரு மல்டிநேஷனல் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வரும் இவருக்கு, 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவு 3 மணிக்கு இவர்கள் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர்.
சரமாரி அடி - கடத்தல்..
காவலாளி இல்லாதது அவர்களுக்கு வசதியாகி போனது. அப்போது கீழ் தளத்தில் அந்த சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தான். முதல் மாடியில் கவுரவும், அவரது மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, கீழ் தளத்துக்கு சென்ற மர்மநபர்கள், சிறுவனை எழுப்பி அவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவனை சரமாரியாக அடித்த அவர்கள், வீட்டு கார் சாவியை தருமாறு கேட்டுள்ளனர். மர்மநபர்கள் மிரட்டலால் பயந்துபோன சிறுவன், கார் சாவியை எடுத்துக் கொடுத்துள்ளான். இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனின் கண்களை கட்டி அவர்கள் காரில் கடத்திச் சென்றனர்.
15 லட்சம் கேட்டு மிரட்டல்
பிறகு, கவுரவை செல்போனில் தொடர்புகொண்ட அவர்கள், அவரது மகனை கடத்திவிட்டதாகவும், 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் அவனை ஒப்படைப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போலீஸுக்கு சென்றால் மகனை கொன்றுவிடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இதனால் கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு மதியம் 2 மணிக்கு சென்ற கவுரவ், 15 லட்சம் ரூபாயை வைத்துவிட்டு சென்றார். பிறகு அன்றைய தினம் மாலையே அவரது மகன் வீடு திரும்பினார்.
'அஞ்சாதே' பட பாணியில்
மகன் வீட்டுக்கு வந்ததை அடுத்து, கவுரவ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படை அமைத்த போலீஸார், முதலில் கவுரவ் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். ஆனால், வீட்டிலும், சுற்றுப்பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் துப்புத் துலக்குவதில் சிரமம் இருந்தது. பின்னர், அந்தப் பகுதியில் இருந்த செல்போன் டவரில் 2-ம் தேதி நள்ளிரவு செல்போன்களுக்கு அழைப்பு வந்து சென்றுள்ளதாக என்பதை கண்காணித்தனர். அப்போது ஒரு செல்போன் நம்பருக்கு கால் வந்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். இயக்குநர் மிஷ்கினின் 'அஞ்சாதே' திரைப்படத்திலும் செல்போன் டவரில் பதிவான எண்ணை கொண்டுதான் கொலையாளிகளை போலீஸார் கண்டுபிடிப்பர்.
மாறுவேடத்தில் போலீஸார்..
இதைத் தொடர்ந்து, அந்த செல்போன் நம்பரை போலீஸார் 'ட்ரேஸ்' செய்யத் தொடங்கினர். அப்போது தும்குருவில் அந்த நம்பரின் சிக்னல் அடிக்கடி காட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு சென்ற போலீஸார், மாறுவேடத்தில் 15 நாட்களாக அந்தப் பகுதியை சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக அங்கு நடமாடிய சுனில் குமார் (23), நாகேஷ் (22) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
கடத்தியது எப்படி?
அப்போது, தாங்கள்தான் சிறுவனை கடத்தி பணம் பறித்தோம் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர் அவர்களிடம் இருந்த கவுரவின் கார், ரூ.9.69 லட்சம் ரொக்கம், ஒரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கேமரா ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சுனில் குமார் 8 மாதங்களுக்கு முன்பு கவுரவ் வீட்டுக்கு 'ப்ளம்பிங்' வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கவுரவ் பெரும் பணக்காரர் என்பதை தெரிந்துகொண்ட சுனில் குமார், அவரது மகனை கடத்த முடிவு செய்தார். மேலும், அந்த சிறுவன் கீழ் தளத்தில் தனியாக தூங்குவதையும், அந்த அறையில் உள்ள பால்கனியில் உள்ள கண்ணாடி 'ஸ்லைடு' கதவை அவர்கள் எப்போதும் பூட்டுவதில்லை என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். பின்னர் தனது நண்பன் நாகேஷுடன் கூட்டு சேர்ந்து சிறுவனை அவர்கள் கடத்தியதை போலீஸாரிடம் கடத்தல்கார்ரகள் தெரிவித்தனர்.