கார் கதவுகளை 20 நிமிடம் பூட்டிவிட்டு.. டாக்சி டிரைவரால் பெண் பயணி பலாத்காரம்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு அதிகாலையில் வாடகைக்கார் மூலம் வீடு திரும்பிய ஒரு பெண், அந்த கார் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
ஜார்கண்ட்டை சேர்ந்த அந்த இளம்பெண் பெங்களூர் எச்ஏஎல் அருகேயுள்ள ஒரு பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தனது நண்பர் வீட்டில் நடைபெற்றது இரவு பார்ட்டி ஒன்றில் அந்த பெண் பங்கேற்றுள்ளார்.
கொலைநகரமாகும் திண்டுக்கல்! ஒரே நாளில் ஒரே மாதிரியான இரண்டு படுகொலைகள்.. தலைகள் துண்டிப்பு!!
செல்போன் செயலி கார்
இதன் பிறகு அதிகாலை 3:30 அளவில் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்ல மொபைல் போன் செயலி மூலமாக முன்னணி கேப் நிறுவனம் ஒன்றின் காரை புக் செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும், பெங்களூர் கேஆர் புரம் அருகே வசிப்பவருமான தேவராஜ் என்ற டிரைவர் அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
பாதி மயக்க நிலை
காரில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் அந்த இளம்பெண் கிட்டத்தட்ட பாதி மயக்க நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இரவு நடந்த பார்ட்டியில் பங்கேற்ற களைப்பு காரணமாக அவர் தூங்கியபடியே இருந்துள்ளார். அரைகுறை ஆடையுடன் ஒரு பெண், கிட்டத்தட்ட மயக்க நிலையில் பயணித்து கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் தேவராஜன் சபலமடைந்துள்ளார். அந்த பெண்ணின் வீடு அருகே கார் சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் காரை நிறுத்திய தேவராஜ் கார் கதவுகளை பின்னால் இருக்கும் பயணி திறக்க முடியாதபடியான ஆப்ஷனை பயன்படுத்தி லாக் செய்துள்ளார்.
20 நிமிடங்கள் பலாத்காரம்
இதன்பிறகு பின், இருக்கைக்கு சென்று பெண்ணை பலாத்காரம் செய்ய ஆரம்பித்துள்ளார். மிகவும் சோர்வாக இருந்த அந்த பெண்ணால் டிரைவரை தடுக்கமுடியவில்லை. இதையடுத்து சுமார் 20 நிமிடங்கள், பலாத்காரம் செய்த அந்த டிரைவர் பெண் பயணியை கீழே இறக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.
விரைந்த போலீஸ்
அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கிழக்கு பெங்களூர் மண்டல துணை போலீஸ் கமிஷனர், சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், இந்த சம்பவம் பற்றி விசாரணையை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
சிசிடிவி காட்சிகள்
இதனிடையே, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கார் நிறுத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்கள் அங்கேயே நின்றதும் பிறகு கார் கிளம்பி சென்றதும் பதிவாகி உள்ளது. இந்த ஆதாரம் உட்பட மேலும் சில ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். இருப்பினும் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தேவராஜ், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
ஆதாரங்களை வலுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பவுரிங் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவில் நண்பர் வீட்டில் பார்ட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய பெண்ணுக்கு வாடகை கார் டிரைவரால் பாதுகாப்பற்ற சூழ்நிலை எழுந்துள்ள சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.