சாமியார் மடத்தில் கட்டி போட்டு வளர்க்கப்படும் மான்.. கர்நாடகாவில் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் சாமியார் மடம் ஒன்றில் மான் கட்டிப்போட்டு வளர்க்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவ தர்மா பீடத்தில் இவ்வாறு மான் கட்டிப்போட்டு வளர்க்கப்படுவது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மடத்தின் சாமியார்கள் அந்த, மானுக்கு தீவனம் அளிக்கும் புகைப்படம் வெளியான நிலையில் வன ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள சாமியார் பெயர் பசவ பிரபு. அவர்தான் மான் வாயில் தீவனம் ஊட்டிக் கொண்டிருக்கிறார்.
1972ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 1 கீழ், மான் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அபராதம் மற்றும் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
இதுகுறித்து மடத்தின் சித்த ராமேஸ்வர சுவாமி கூறுகையில், அந்த மான் தற்போது மடத்தில் கிடையாது. அண்மையில் மடத்துக்குள் வந்தது. எனவே அதை பிடித்து தீவனம் போட்டு பழையபடி வனப்பகுதிக்குள் விட்டு விட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பீதர் வனத் துறை பொறுப்பாளர் சிவசங்கர் இதுபற்றி கூறுகையில், மான் மடத்துக்குள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே சாமியார் அமர்ந்து இருக்கும் இருக்கையில் மான் தோல் விரித்து வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் விசாரிக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.