குஜராத் பாணியில் ஷிப்ட்டாகும் கர்நாடக அரசியல்.. பொது சிவில் சட்டம் வரும்.. பசவராஜ் பொம்மை ஒரே போடு!
பெங்களூர்: கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமலாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ள நிலையில், கர்நாடகா முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அசாம், உத்தராகண்ட் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் வெளிப்படையாக பேசி இருந்த சூழலில், தற்போது அந்த வரிசையில் கர்நாடகாவும் இணைந்துள்ளது.
கர்நாடகா உதயமான நாள் விழா- கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த்- நன்றி சொன்ன முதல்வர் பசவராஜ் பொம்மை!
தனித்தனியான சிவில் சட்டங்கள்
இந்தியாவை பொறுத்தவரை அரசியல் சாசனம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தால் அரசியல் சாசனத்தின் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தபோதிலும், சில சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி வருகின்றனர். உதாரணமாக, திருமணம், விவகாரத்து, வாரிசு உரிமை, சொத்து உரிமை போன்ற விஷயங்களுக்கும் தனித்தனியாக சிவில் சட்டங்கள் இருக்கின்றன.
பொது சிவில் சட்டமும், பாஜகவும்
குறிப்பாக, இஸ்லாம் மதத்தில் இதுபோன்ற சிவில் சட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், இப்படி ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக இருக்கும் சிவில் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது பாஜகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. இதன் ஒருபகுதியாகவே, இஸ்லாமியர்கள் விவகாரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்தது.
பரபரக்கும் பேச்சு
இதனிடையே, சமீபகாலமாகவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பாஜக அவ்வப்போது பேசி வருகிறது. மத்திய உள்துறை அமித் ஷா கூட நேற்று டெல்லியில் நடந்த கூட்டம் ஒன்றில், "இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்" என உறுதியாக கூறினார். மேலும், குஜராத் தேர்தல் வாக்குறுதியிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. இந்த பொது சிவில் சட்டத்துக்கு சிறுபான்மை மக்கள் மத்தியில்.. குறிப்பாக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக கவலைப்படுவதாக தெரியவில்லை.
கர்நாடகாவில் அமலாகிறது?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "தீனதயாள் உபத்யாய காலம் முதலாகவே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசி வருகிறது. நாடு முழுவதும் இதுதொடர்பான விஷயங்கள் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன. சரியான தருணம் வரும்போது, பொது சிவில் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும். கர்நாடகாவிலும் பொது சிவில் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார். பசவராஜ் பொம்மையின் இந்த பேச்சால் கர்நாடகாவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.